Jun 02, 2018 10:34 AM

’அருவாசண்ட’ படத்தில் இணைந்த ரம்யா நம்பீசன்!

’அருவாசண்ட’ படத்தில் இணைந்த ரம்யா நம்பீசன்!

சிலந்தி, ரணதந்த்ரா படங்களை தொடர்ந்து ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முடித்திருக்கும் படம் ‘அருவாசண்ட’.

 

கபடி விளையாட்டையும், கௌரவக் கொலைகளையும் பின்னணியாகக் கொண்ட அதிரடிப் படமாக உருவாகியிருக்கும், இதன் கிளைமாக்ஸ் காட்சி சமூக அவலங்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக, உணர்வுப் பூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது.  அந்த காட்சிக்காகவே சரண்யா பொன்வண்ணனுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று படத்தை பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

 

இந்த நிலையில், இப்படத்தில் புதிதாக ரம்யா நம்பீசன் இணைந்துள்ளார். ஆனால் நடிகையாக அல்ல, பாடகியாக. ஆம், இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களில், இரண்டு பாடல்களை வைரமுத்து எழுத, ஒரு பாடலை இயக்குநர் ஆதிராஜன் எழுதியுள்ளார்.

 

இதில், வைரமுத்து எழுதிய “சிட்டு சிட்டுக் குருவி வாலாட்டுதோ...தொட்டுத் தொட்டு இழுத்து தாலாட்டுதோ...” என்ற பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியிருக்கிறார். அவருடன் பாலாஜி ஸ்ரீ இணைந்து பாடியிருக்கிறார். 

 

தரணின் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பு பெறும் விதத்தில் உருவாகியிருந்தாலும், ரம்யா நம்பீசன் பாடியிருக்கும் பாடல் காதலர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு உட்காருவதோடு, எல்லோருடைய செல்போன்களிலும் ரிங்டோனாகவும் வலம் வரும், என்று இயக்குநர் ஆதிராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

ராதிகா நடனம் அமைத்திருக்கும் இப்பாடல் கேரளாவில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

 

சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் கல்லேரி கலையை கவணிக்க, வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்திருக்கிறார். அதிரடி சண்டைக்காட்சிகளை தளபதி தினேஷ் வடிவமைத்துள்ளார்.

 

புதுமுகம் ராஜா, மாளவிகா மேனன் நாயகன் நாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், சௌந்தர்ராஜா, கஞ்சா கருப்பு, சுஜாதா, இயக்குநர் மாரிமுத்து, காதல் சுகுமார், விஜய் டிவி சரத் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.

 

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பாடல்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன.