Jun 08, 2018 03:17 PM

’காலா’ படத்தில் வசனம் எழுதிய தாராவி இளைஞர்!

’காலா’ படத்தில் வசனம் எழுதிய தாராவி இளைஞர்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ’காலா’ திரைப்படம்  பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் வசனங்கள் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள், வலைதளங்களில் பெரும் விவாதத்தை உண்டு பண்ணும் அளவிற்கு பெரும் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. 

 

காலா படம் தாராவி நிலப்பரப்பை பற்றிய படம் என்பதால் தாராவியில் வாழ்ந்த ஒருவர் இந்தப்படத்திற்கு வசனம் எழுதினால் சரியாக இருக்கும் என்று இயக்குநர் ரஞ்சித் விரும்பியிருக்கிறார். அதன்படி, தாராவியில் பிறந்து வளர்ந்த மகிழ்நனுக்கு இந்த படத்தில் வசனம் எழுத வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குநர் இரஞ்சித். 

 

இயக்குநர் ரஞ்சித் தானே நேரடியாக தாராவிக்கு சென்று ஆய்வு செய்த பிறகே திரைக்கதை எழுதவும் ஆரம்பித்திருக்கிறார்.

 

அறிமுக வசனகர்த்தா என்றில்லாமல் முழு சுதந்திரம் கொடுத்து எழுத வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இவரோடு இணைந்து எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவும், இயக்குநர் ரஞ்சித்தும் வசனம் எழுதியிருக்கிறார்கள்.

 

பல மொழி கலந்து வந்திருக்கும் வசனம் சலிப்பூட்டும்படியாக இல்லாமல், தாராவி நெல்லை தமிழ் வாசனையோடு வந்திருப்பதற்கு மகிழ்நனும் ஒரு காரணம். 

 

மண்ணை பற்றி பேசுவது மட்டுமில்லாமல், மண்ணிலிருந்தே படைப்பாளிகளை உலகுக்கு அடையாளப்படுத்தும் இயக்குநர் ரஞ்சித்துக்கு அந்த வகையில் ஒரு சபாஷ்.