சரவணன் நாயகனாக நடிக்கும் ‘சட்டமும் நீதியும்’ இணையத் தொடரின் டிரைலர் வெளியானது!

’பருத்திவீரன்’ படம் மூலம் சித்தப்பாவாக பிரபலமான நடிகர் சரவணன் மற்றும் நம்ரிதா எம்.வி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இணையத் தொடர் ‘சட்டமும் நீதியும்’. ஜீ5-ன் ஒரிஜினலாக உருவாகியுள்ள இந்த இணையத் தொடர் வரும் ஜூலை 18 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
புதுமையான களத்தில், சரவணன் வழக்கறிஞராக சரவணன் நடித்திருக்கும் ‘சட்டமும் நீதியும்’ தொடரின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் பெற்றுள்ளது. தமிழ் திரைத்துறையில் 35வது ஆண்டைக் கடந்திருக்கும் நடிகர் சரவணன், 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த தொடர் மூலம் ஹீரோவாக நடித்திருக்கிறார். நடிகர் சரவணனுடன் உறுதியும், உணர்ச்சிகளும் நிறைந்த சக்திவாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா.எம்.வி நடித்திருக்கிறார்.
சட்டமும் நீதியும் சீரிஸ் ’குரலற்றவர்களின் குரல்’ எனும் கருத்திலிருந்து உருவாகியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.
அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கியிருக்கும் இத்தொடரை ’18 கிரியேட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை கொண்ட படைப்பாக இந்த தொடர் உருவாகியுள்ளது.