Jun 06, 2018 07:43 AM

ஒரு ஏழை மாணவர் கூட டாக்டர் படிப்பை நினைத்து பார்க்க முடியாது! - விஷால்

ஒரு ஏழை மாணவர் கூட டாக்டர் படிப்பை நினைத்து பார்க்க முடியாது! - விஷால்

நீட் தேர்வில் தோல்வியுற்றதால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்ட பிரதீபாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்திருக்கும் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால், தமிழகத்தில் ஒரு ஏழை மாணவர் கூட டாக்டர் படிப்பை நினைத்து பார்க்க முடியாத சூழல் ஏற்படும், என்று கூறியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நீட் தேர்வுக்கு எங்கள் கிராமப்புற மாணவ, மாணவிகளை ஒவ்வொருவராக இழந்துவருகிறோம். போராடி உயிரை மாய்த்துக்கொண்டாள் அனிதா. தேர்வு எழுதியும் தோற்றதால் உயிரை தந்து இருக்கிறாள் பிரதீபா. இந்த செய்தி கேள்விப்பட்டதில் இருந்தே வேதனையாக இருக்கிறது. 

 

நீட் எழுதும் மாணவர்களுக்கு எப்போதும் கைக்கொடுக்க நான் தயாராக இருக்கிறேன், நீட் நிரந்தரம் என்றால் நீட் எழுத மாணவர்களுக்கு போதுமான வசதிகளையும், சிறப்பு வகுப்புகளையும், மன தைரியத்தையும் கல்வி துறை வழங்கிட வேண்டும். இது அரசின் கடமை. இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஒரு ஏழை மாணவர் கூட டாக்டர் படிப்பை நினைத்து பார்க்க முடியாது என்ற நிலை உருவாகி விடும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.