Oct 08, 2017 04:05 PM

வர இருக்கும் தேர்தலில் போட்டி - விஷால் அதிரடி அறிவிப்பு!

வர இருக்கும் தேர்தலில் போட்டி - விஷால் அதிரடி அறிவிப்பு!

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற செயலாளர் பதவியில் அமர்ந்த விஷால், உடனடியாக தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, தனது அம்மா பெயரில் ஆரம்பித்த தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய தொடங்கினார்.

 

இதன் மூலம், விஷால் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக கூறப்பட்ட நிலையில், விஷாலே தற்போது பல பேட்டிகளில், மக்களுக்கு உதவி செய்ய பதவி தேவை என்றால், அந்த பதவியில் அமர நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன், என்று கூறி வருகிறார்.

 

இந்த நிலையில், வர இருக்கும் தேர்தலில் தான் போட்டியிடுவேன், என்று விஷால் அறிவித்துள்ளார். ஆனால், இது சட்டமன்ற தேர்தல் அல்ல, அடுத்த நடிகர்கள் சங்க தேர்தலில்.

 

இன்று நடிகர் சங்கத்தின் 64 வது பொதுக்குழு சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் உறுப்பினர்கள், நாடக நடிகர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டார்கள்.

 

இதில் பேசிய விஷால், “நாங்கள் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். வாக்குறுதியிலும், விதிமுறையிலும் எள்ளளவும் மீறவில்லை. எங்களது செயல்பாடுகளில் எந்த குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியாது.

 

நடிகர் சங்க கட்டடம் கட்ட நிறைய தடங்கல் வந்தது. முதலில் புயல், பின்னர் முதல்வர் ஜெயலலிதா மறைவு. வழக்கு என தொடர்ந்து சோதனைகள் வந்தது. இருந்தாலும், கட்டடம் கட்டி முடித்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தில் இருக்கிறோம். அடுத்த வருடம் இறுதிக்குள் நடிகர் சங்க கட்டிடம் முடிக்கப்படும். பொதுமக்கள் பார்வையிட்டு செல்லும் வகையில் நடிகர் சங்க கட்டடம் கட்டப்படும். 

 

அடுத்த நடிகர் சங்க தேர்தலிலும் நாங்கள் நிற்க இருக்கிறோம். ஏனென்றால், சங்க கட்டிடத்தை பாதியில் விட்டு செல்ல மாட்டோம். கட்டிடத்தை முடித்த பின்பு, அதன்பின் வரும் தேர்தலில், இளைஞர்களுக்கு வழிவிடுவோம்.” என்று தெரிவித்தார்.