Latest News :

’தறி’ சீரியல் மூலம் நெசவுக்கலை மீது மக்களின் கவனம் திரும்பும் - நடிகை லலிதா குமாரி நம்பிக்கை

30e664bf3bde36d9d1f8894781627877.jpg

கலர்ஸ் தமிழ் சேனல் தனது ஓராண்டை நிறைவு செய்திருக்கும் நிலையில், மனதை தொடும் கதையம்சம், மன உறுதி கொண்ட பெண்களின் சக்தியை, அவர்களின் திறமையை, தனது நிகழ்ச்சிகளின் மூலம் காட்சிப்படுத்தி கொண்டாடி வருகிறது. இந்த குறிக்கோளை பின் தொடரும் வகையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ‘தறி’ என்ற புதிய மெகா தொடர் ஒளிபரப்பாகிறது.

 

மெதுவாக மறைந்து வரும் நமது பாரம்பரிய நெசவுதொழிலுக்கு உயிரூட்டி, அதை மீட்சிபெற செய்ய வேண்டுமென்ற குறிக்கோளுடைய ஒரு பெண்ணின் பயணத்தை நேர்த்தியான கதையாக தறி சொல்கிறது. மன உறுதிகொண்ட இரண்டு பெண் கதாபாத்திரங்களின் வழியாக சொல்லப்படுகின்ற இந்த கதைகளும் பார்வையாளர்களுக்கு பொறுப்புள்ள ஒரு பொழுதுபோக்காக இருக்கும் என்று குழுவினர் பெருமை அடைகிறார்கள்.

 

இளம்பெண்ணான அன்னம் (ஸ்ரீநிதி நடிப்பில்) என்ற கதாபாத்திரத்தின் வழியாக சொல்லப்படும் இந்தக் கதை, நொடித்துப்போன ஒரு நெசவாளர் குடும்பத்தின் போராட்டங்களையும், மெல்ல மெல்ல மறைந்து வருகிற பாரம்பரிய நெசவுக்கலைக்கு புத்துயிரூட்டுவதற்கான அவர்களது மனப் போராட்டம் வழியாக பார்வையாளர்களை உணர்ச்சிகரமான உலகத்துக்குள் இந்நிகழ்ச்சி அழைத்துச் செல்கிறது. நெசவாளிகளின் வாழ்க்கைச் சவால்களை நிஜமாகப் பிரதிபலிக்கிற தறி நெடுந்தொடரில் சபரி, மு.ராமசாமி, பரீனா, அங்கனா மற்றும் இன்னும் பல திறமையான நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். 

 

இந்த தொடர் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கிறார் நடிகை லலிதா குமாரி. கே.பாலசந்தரின் `மனதில் உறுதி வேண்டும்' படத்தில் நடிகையாக அறிமுகமானவர் லலிதா குமாரி. இவர் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போதைய நடிகர் சங்க நிர்வாகத்தில் ஆர்வமாகப் பணியாற்றி வரும் இவர், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தறி’ தொடர் தயாரிப்பது பெருமையாக கருதுகிறார். 

 

இது குறித்து தயாரிப்பாளர் லலிதா குமாரி பேசுகையில், “நெசவாளர் சமூகத்தின் உண்மையான சாரத்தையும் மற்றும் அவர்களது சவால்களையும் நாங்கள் நேர்த்தியாக படம்பிடித்திருக்கிறோம். தறி தொடரை தயாரிப்பதற்காக கடந்த 2018 பிப்ரவரி முதல் மாதத்திற்கு இரண்டு வாரங்கள் அங்கு தங்கி, நெசவாளர்கள் எப்படி நூல் எடுக்கிறார்கள். எப்படி நூலை காய வைக்கிறார்கள். எப்படி கலர் பூசுகிறார்கள். பட்டு நூலை எப்படி காயவைத்து பிரிக்கிறார்கள் என்பதை அறிந்து, அங்கிருக்கும் மக்களிடம் நேர்காணல் செய்துதான் இந்த கதையை உருவாக்கி வருகிறோம். இந்த கதையின் வழியாக நெசவுக்கலை மீது மக்களது கவனமும், அக்கறையும் திரும்பும் என்று உறுதியாக நம்புகிறோம். பாரம்பரியமான நெசவு தொழிலை பாதுகாக்கும் அவசியத்தை வலியுறுத்துவதில் இந்த நிகழ்ச்சி ஒரு வினையூக்கியாக இருக்கும்." என்றார். 

 

தறி நெடுந்தொடரை சக்திவேல் இயக்கி வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, "காஞ்சிபுரம் பல ஆண்டுகளாக நெசவுக்கலையை தமது உயிராகக் காப்பாற்றி வருகிற பட்டு நகரமாகும். இந்த நகரின் மரபும் பாரம்பரியமும் உலகளாவிய அங்கீகாரங்களை தமிழ்நாட்டுக்குப் பெற்றுத்தந்திருக்கிறது. அதில் பட்டுத் தொழிலில் இரவும் பகலும் அயராது பாடுபட்ட பல தலைமுறைகளைச் சேர்ந்த நெசவாளிகளின் பங்கு அதிகம்” என்றார்.