May 22, 2020 03:37 PM

நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய கெளதம் மேனன்!

நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய கெளதம் மேனன்!

முன்னணி இயக்குநர் என்ற அந்தஸ்த்தில் இருந்து சற்று இறங்கியிருக்கும் கெளதம் மேனன், வெப் சீரிஸ், குறும்படம் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களை ஹீரோவாக வைத்து திரைப்படம் இயக்குவது என்று சற்று சறுக்கியிருக்கும் நிலையில், நடிகராக அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’

 

இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த கெளதம் மேனனின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு நடிப்பு வாய்ப்பு ஏராளமாக வர, அனைத்தையும் தேர்வு செய்யாமல், நல்ல கதாப்பாத்திரமாக தேர்வு செய்பவர், நடிப்பில் சற்று கவனம் செலுத்தவும் தொடங்கியிருக்கிறார்.

 

அதன்படி, ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் கெளதம் மேனன் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் வர்ஷா பொல்லம்மா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் வாகை சந்திரசேகர், அறிமுக நடிகர் குணா மற்றும் சாம் பால் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

டி.ஜி பிலிம் கம்பெனி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய எஸ்.இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார்.

 

ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்‌ஷன், திரில்லர் கலந்து திரைக்கதையாக உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார்.

 

இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்கு தயாராகி வரும் படக்குழுவினர் விரைவில், தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட உள்ளனர்.