’திவ்யா’ திரைப்பட விமர்சனம்
Casting : RJP, Kethi, Senthil, Pawnraj, Anand Ram, Kalavathi, Sabi, Jivi
Directed By : RJP
Music By : Sankar Ram
Produced By : RJP Media - கலாரவி
ஒரே கல்லூரியில் படிக்கும் நாயகன் ஆர்.ஜே.பியும், நாயகி கேத்தியும் காதலிக்கிறார்கள். இவர்களது காதல் விவகாரம் நாயகியின் தந்தைக்கு தெரிய வருகிறது. நாயகன் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால், தனது மகளின் படிப்பை நிறுத்திவிட்டு உறவினருக்கு திருமணம் செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகளை அவசரம் அவசரமாக செய்கிறார். இதற்கிடையே, நாயகனும், நாயகியும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். அதன்படி நண்பர்களின் உதவியுடன் வீட்டை விட்டு வெளியேறும் காதல் ஜோடி, காதலில் வெற்றி பெற்றதா அல்லது பெற்றோரின் கெளரவம் வெற்றி பெற்றதா ? என்பதை உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு இதயங்களை கனக்க செய்யும் வகையில் சொல்வதே ‘திவ்யா’.
எத்தனை திரைப்படங்கள் வந்தாலும், எத்தகைய போராட்டங்களை நடத்தினாலும், ஆணவப் படுகொலைகளின் அரங்கேற்றம் தொடர்ந்து கொண்டிருக்கும் இத்தகைய சூழ்நிலையில், அதன் பின்னணியையும், இறுதியில் பாதிக்கப்படுகிறவர்களின் மனவலியையும் மனதுக்கு நெறுக்கமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே.பி.
கதை எழுதி இயக்கியிருக்கும் ஆர்.ஜே.பி, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக பயணித்திருக்கும் ஆர்.ஜே.பி, தனது அளவான மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். வறுமையான குடும்ப சூழல், கடமைகள் நிறந்த பாதை என்று பயணிப்பவரின் வாழ்க்கையில் காதல் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது, என்பதை தனது நடிப்பின் வாயிலாக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கும் ஆர்.ஜே.பி ஒரு நடிகராக படத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் கேத்தி, பக்கத்து வீட்டு பெண் போல் எளிமையான தோற்றத்திலும், அளவான நடிப்பின் மூலமாகவும் கவனம் ஈர்க்கிறார். காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்த பிறகு அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், இறுதியில் அவருக்கு இழைக்கப்படும் அநீதி ஆகியவற்றில் பார்வையாளர்களை கலங்க வைக்கும் விதத்தில் நடித்திருக்கிறார்.
நாயகியின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனந்த் ராம், அம்மா வேடத்தில் நடித்திருக்கும் கலாவதி, நாயகனின் தாத்தா வேடத்தில் நடித்திருக்கும் பவுன்ராஜ், நண்பர்களாக நடித்திருக்கும் சபி மற்றும் ஜிவி, வில்லனாக நடித்திருக்கும் செந்தில் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் புதிய முகங்கள் என்றாலும், தங்களது சிறப்பான நடிப்பின் மூலம் கதாபாத்திரங்களை பார்வையாளர்கள் மனதில் பதிய வைத்து விடுகிறார்கள்.
எளிமையான மனிதர்களை அவர்களது இயல்பு தன்மையோடு காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் செல்வகுமார், கதபாத்திரங்கள் போல் கதைக்களத்தையும் இயல்பு தன்மையோடு காட்சிப்படுத்தி, உண்மை சம்பவத்தின் பிரதிபலிப்பாக படத்தை கொடுத்திருக்கிறார்.
சங்கர் ராம் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருந்தாலும், படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணிக்கவில்லை.
என்ன நடக்கப் போகிறது என்பதை ஆரம்பத்திலேயே யூகித்தாலும், அது எப்படி நடக்கப் போகிறது என்பதை கொஞ்சம் சுவாரஸ்யத்தோடு சொல்ல முயற்சித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் வளர்பாண்டி.
சாதி வெற்றி பெற்ரோரின் கண்களை மறைப்பது மட்டும் இன்றி, அவர்களின் மனதை கல்லாக்குவது எப்படி ? என்பதற்கான விளக்கத்தை திரை மொழியின் மூலம் சொல்லியிருக்கும் இயக்குநர் ஆர்.ஜே.பி, சாதி பாகுபாடு பற்றி எந்தவிதமான பிரசாரத்தையும் மேற்கொள்ளாமல், குடும்ப விசயத்தில் பிறர் தலையிட்டால் என்ன நடக்கும் என்பதை மட்டும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
வீட்டை விட்டு வெளியேறும் காதலர்கள் உறவினர்களிடம் சிக்குவது, காவல்துறையின் தலையீட்டுக்குப் பிறகு நடக்கும் கொடூரம் மற்றும் திருப்பங்கள் இல்லாத காட்சிகள் ஆகியவற்றால் படம் மெதுவாக நகரும் உணர்வை கொடுத்தாலும், கதைக்கருவாக எடுத்துக் கொண்ட விசயம், சொல்ல வந்ததை பிரச்சாரம் போன்ற வசனங்கள் இல்லாமல், கூர்மையாகவும், சுருக்கமாகவும் சொன்ன விதம் ஆகியவற்றுக்காக படத்தையும், இயக்குநர் ஆர்.ஜே.பி-யையும் பாராட்டலாம்.
மொத்தத்தில், ‘திவ்யா’ மனதில் நிற்கும்.
ரேட்டிங் 3/5

