Jun 07, 2021 01:32 PM

சமந்தாவின் இணையத் தொடரை நிறுத்த வேண்டும் - பாரதிராஜா எச்சரிக்கை

சமந்தாவின் இணையத் தொடரை நிறுத்த வேண்டும் - பாரதிராஜா எச்சரிக்கை

சமந்தா நடிப்பில் உருவாகி, அமேசான் ஒடிடியில் வெளியாகியிருக்கும் ‘தி பேமிலி மேன் 2’ இணையத் தொடருக்கு தமிழ அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசோ அல்லது தொடரை தயாரித்த அமோசான் நிறுவனமோ, இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன், தொடரில் நடித்திருக்கும் தமிழ் நடிகை சமந்தா மற்றும் தமிழ் நடிகர் மைம் கோபி உள்ளிட்டவர்களிடம் இருந்து கூட எந்த ஒரு விளக்கமும் வெளியாகவில்லை. இதனால், தமிழ் உணவாளர்கள் இத்தொடர் மீதும் அதில் நடித்தவர்கள் மீதும் கடும்கோபத்தில் உள்ளனர்.

 

இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா ‘தி பேமிலி மேன் 2’ தொடரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் இனத்திற்கு எதிரான ’தி பேமிலி மேன் 2’ இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசுத் தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. 

 

தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத, தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன.

 

அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும் தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

 

இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும். இத்தொடரில் தமிழ், முஸ்லீம், வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள்.

 

’தி பேமிலி மேன் 2’ தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும்.

எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.