Nov 22, 2021 06:42 PM

சண்டைப்பயிற்சி இயக்குநர் சில்வாவை இயக்குநராக்கிய விஜய்!

சண்டைப்பயிற்சி இயக்குநர் சில்வாவை இயக்குநராக்கிய விஜய்!

தமிழ் சினிமாவின் முன்னணி சண்டைப்பயிற்சி இயக்குநரான ஸ்டண்ட் சில்வா, தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றி வருகிறார். விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் பேவரைட் ஸ்டண்ட் மாஸ்டரான சில்வா, தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

 

‘சித்திரைச் செவ்வானம்’ என்ற தலைப்பில் ஸ்டண்ட் சில்வா இயக்கியிருக்கும் திரைப்படம் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி நேரடியாக ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

 

தந்தை, மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி தந்தையாகவும், அறிமுக நடிகை பூஜா கண்ணன் மகளாகவும் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகை சாய் பல்லவியின் தங்கை ஆவார். இவர்களுடன் ரீமா கலிங்கல், வித்யா பிரதீப் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

பிரபல இயக்குநர் விஜய், இப்படத்தின் கதையை எழுதியிருப்பதோடு, தயாரிக்கவும் செய்திருக்கிறார். அவருடைய தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன் மற்றும் பி.மங்கையர்கரசி இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

 

இயக்குநராக அறிமுகமாவது குறித்து கூறிய ஸ்டண்ட் சில்வா, “இயக்குநர் விஜய் என்னிடம் ஒரு கதை சொன்னார். அட்டகாசமாக இருந்தது. இந்தக் கதையை நீங்கள் இயக்குங்கள் நன்றாக இருக்கும் என்றார். எனக்கும் அந்தக்கதையை இயக்கலாம் என்று தோன்றியது. உடனடியாக அந்த கதையை நிறைய மேம்படுத்தி, முழு திரைக்கதையாக மாற்றினோம். பின் சமுத்திரகனியிடம் இந்தக் கதையை சொன்னேன். சொன்ன மறுநொடியே ‘தம்பி சூப்பரா இருக்கு எப்ப ஷீட்டிங் போகலாம்’ என்று கேட்டார். அப்படி உருவானது தான் ‘சித்திரைச் செவ்வானம்' திரைப்படம். நான் ஃபைட் மாஸ்டர் என்பதால் இது ஆக்சன் படம் என்று நினைத்து விடாதீர்கள், நெஞ்சை தொடுவது போன்ற உணர்வுப்பூர்வமான படம் தான் இது. ஒரு அப்பாவுக்கும் மகளுக்குமான அன்பான உறவு தான் கதை.  சமூகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல், அதை அவர்கள் கடப்பது தான் கதை. நானும் இயக்குநர் விஜய்யும் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறோம். நினைத்ததை விட மிக அழகான திரைப்படமாக வந்திருக்கிறது.” என்றார்.

 

படத்தின் தயாரிப்பாளரான விஜய் கூறுகையில், “இந்த திரைப்படம் எங்கள் அனைவருக்குமே மிகவும் பிடித்தமான படைப்பு. 2014 ல் எனக்கு தோன்றிய ஒரு சிறு ஐடியாவை ஒரு கதையாக எழுதி வைத்திருந்தேன். 2020 பொதுமுடக்க காலத்தில் நானும் சில்வா மாஸ்டரும் பேசிக்கொண்டிருந்த போது, இந்தக் கதையை சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்களே இயக்குங்கள் என்று சொன்னேன். ஒரு ஆக்சன் இயக்குநர் என்றால் ஆக்ஷனில் மட்டும் தான் அவர்கள் கவனம் செலுத்துவார்கள் என்று அனைவரும் நினைத்துக் கொள்வார்கள், ஆனால் சில்வா மாஸ்டர் மிகவும் எமோஷலானவர், அவருக்குள் ஒரு மென்மையான பக்கம் இருக்கிறது. மிகவும் எளிய சுபாவம் கொண்டவர், நிறைய பேருக்கு உதவி செய்பவர். அவர் இந்தக் கதையை மிகச் சரியாக கையாளுவார் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் தான் இந்தப்படத்தை நீங்கள் இயக்குங்கள் என்று சொன்னேன், அவரும் ஒப்புக்கொண்டார். அவருடன் இணைந்து இப்படத்தை செய்தது, எனது கடமையாகத் தான் நினைக்கிறேன். சில்வா மாஸ்டர் எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். இப்படம் உருவானதற்கு முழுக்காரணம் அவர் தான்.” என்றார்.

 

படம் குறித்து சமுத்திரக்கனி கூறுகையில், “‘சித்திரைச் செவ்வானம்’ ஒரு அழகான திரைப்படம். என் தம்பி ஃபைட் மாஸ்டர் சில்வா திடீரென ஒருநாள் வந்து, என்னிடம் ஒரு கதை சொன்னார். அவரிடமிருந்து இப்படி ஒரு கதையை நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு அப்பா, பொண்ணு இருவருக்குமிடையிலான உணர்வுப்பூர்வமான பந்தம், அவர்களின் வாழ்க்கை பயணம், அதில் நடக்கும் பிரச்சனைகள் தான் கதை. இப்படி மனதை உருக்கும் ஒரு உணர்வுபூர்வமான கதையை, என் தம்பி சொல்வார் என நான் சுத்தமாக எதிர்பார்க்கவேயில்லை. கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஷூட்டிங் போகலாம் என்றேன். மிக அற்புதமான படமாக உருவாக்கி விட்டார். இம்மாதிரியான ஒரு மிகச்சிறந்த படத்தில் என்னையும் பங்கேற்க வைத்ததற்கு சில்வாவுக்கு நன்றி. இது நம் சமூகத்திற்கு அவசியமான திரைப்படம். அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் திரைப்படமாக இருக்கும்" என்றார்.