Aug 02, 2022 05:41 AM

அருள் சரவணனின் படத்தால் பைனான்சியர் அன்புசெழியனுக்கு வந்த சோதனை!

அருள் சரவணனின் படத்தால் பைனான்சியர் அன்புசெழியனுக்கு வந்த சோதனை!

தமிழ் சினிமாவில் பிரபல பைனான்சியராகவும் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் அன்புசெழியன். இவர் பல முன்னணி ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் படங்களுக்கு கடன் உதவி வழங்குவதோடு, சில படங்களை தனது கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டு வருவதோடு, திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

 

சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் அருள் சரவணன் நாயகனாக நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘தி லெஜண்ட்’ படத்தை அன்புசெழியன் தான் வெளியிட்டார். உலகம் முழுவதும் சுமார் 2500 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இந்த படத்தை தமிழகம் முழுவதும் சுமார் 800 திரையரங்குகளில் அன்புசெழியன் வெளியிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

 

இந்த நிலையில், அன்புசெழியன் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்புசெழியனின் சென்னை அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

அதேபோல், மதுரையில் அன்புசெழியனுக்கு சொந்தமான சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வரிமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், தேனி, மேகமலை, உசிலம்பட்டி, குச்சனூர் ஆகிய பகுதிகளில் அன்புசெழியனுக்கு சொந்த இடங்கள் இருப்பதாகவும், அங்கேயும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.