Jan 19, 2023 09:28 AM

பணத்துக்காக கொலை செய்யும் கூட்டத்தின் கதை தான் ‘கொட்டேசன் கேங்’ - இயக்குநர் விவேக் கே.கண்ணன்

பணத்துக்காக கொலை செய்யும் கூட்டத்தின் கதை தான் ‘கொட்டேசன் கேங்’ - இயக்குநர் விவேக் கே.கண்ணன்

இயக்குநர் விவேக் கே.கண்ணன் இயக்கத்தில் உருவாகும் ‘கொட்டேசன் கேங்’ (Quotation Gang) படத்தில் பிரியாமணி, ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், சாரா அர்ஜூன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் அஷ்ரப் மல்லிசேரி, ஜெய பிரகாஷ், அக்‌ஷயா, பிரதீப் குமார், விஷ்ணோ வாரியர், சோனல் கில்வானி, கியாரா, சட்டிண்டர், ஷெரின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படம் குறித்து இயக்குநர் விவேக் கே.கண்ணன் கூறுகையில், “இந்த கதையை நாங்கள் ஓடிடிக்கான படமாக தான் ஆரம்பித்தோம். ஆனால், இது தியேட்டருக்கான படம் என்பதை பின்பு உணர்ந்தோம். இந்தப் படம் ரவுடி கூட்டத்திற்கு இடையே நடக்கும் மோதல் பற்றிய கதை கிடையாது, ஆனால் Quotation Gang உணர்ச்சி மிகுந்த கதையாக இருக்கும். பணத்துக்காக கொலை செய்யக்கூடிய கொலைகாரர்கள் பற்றிய கதையாக இது இருக்கும். 

 

இது ஆக்‌ஷன் பற்றிய கதை கிடையாது ஆனால் அங்கிருக்கும் வாழ்க்கையின் உணர்ச்சிகளைக் கொண்டது. சென்னை, மும்பை மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களில் ஹைப்பர்லிங்க் எமோஷனல் ட்ராமாவாக உருவாக்கி உள்ளோம். இந்த கதையை கோவிட் காலத்திலும் படமாக்கி உள்ளோம்.

 

Quotation Gang

 

ஏற்கனவே, நான் பிரியாமணியுடன் ஒரு படத்தில் வேலை செய்ய வேண்டி இருந்தது. நான் எப்போது இந்த கதையை அவரிடம் சொன்னேனோ அவருக்கு கதை பிடித்துப் போய் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்தார். அதேபோல, ஜாக்கி ஷெராப் கதைக்கு உள்ளே வந்ததும் இது பான் இந்தியா படமாக மாறியது.

 

படத்தில் சன்னி லியோன் தீவிரமான நடிப்பைக் கொடுத்துள்ளார். அவரது அர்பணிப்பும் கடின உழைப்பும் மிகச் சிறந்ததாக இருந்தது. சாரா அர்ஜூன் இதுவரை கண்டிராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் மற்றொரு ஹைலைட் ட்ரம்ஸ் சிவமணியின்  இசை. அவர் இந்தப் படத்திற்காக தனது இரத்தமும் சதையையும் கொடுத்துள்ளார். அதை டீசர் இசையிலேயே நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.” என்றார்.

 

இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் ட்ரம்ஸ் சிவமணி படம் குறித்து கூறுகையில்,  “நாங்கள் இருவரும் வடசென்னையை சேர்ந்தவர்கள். அதனால், அவரது பார்வையை என்னால் இன்னும் சிறப்பாக புரிந்து கொள்ள முடிந்தது. என்னுடைய ஏரியாவில் இது போன்ற கேங் மற்றும் அதன் சண்டைகளைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அதனால், எங்களுடைய லோக்கல் இசை மற்றும் அதன் தன்மையை சேர்த்துள்ளோம். இந்தக் கதைக்கு அது தேவையான எமோஷனைக் கொண்டு வந்துள்ளது. இந்தக் கதையில் இசை முக்கியமானதொரு பங்கு வகிக்கிறது. சில பாடல்களும் இந்தக் கதைக்குத் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.

 

 

அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கே.ஜே.வெங்கட்ராமன் படத்தொகுப்பு செய்துள்ளார்.