Jan 21, 2023 06:24 AM

பனை விவசாயிகளுக்காக படம் தயாரித்த தயாரிப்பாளர்! - பிரபலங்கள் பாராட்டு

பனை விவசாயிகளுக்காக படம் தயாரித்த தயாரிப்பாளர்! - பிரபலங்கள் பாராட்டு

பல்வேறு நன்மைகலை தரக்கூடிய பனை மரத்தை நம்பி வாழ்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு காரணம், தமிழகத்தில் கள் இறப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தான். இதனால், பனை மரத்தை நம்பியிருந்த விவசாயிகள் பலர் வருமானம் இன்றி கஷ்ட்டப்படுகிறார்கள். இது குறித்து பல்வேறு அமைப்பினர் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை.

 

இந்த நிலையில், பனை மரத்தை நம்பி வாழ்ந்த விவசாயிகளின் அவல நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையில் உருவாகியுள்ளது ‘நெடுமி’ என்ற திரைப்படம். அறிமுக இயக்குநர் நந்தா லட்சுமணன் இயக்கியுள்ள இப்படத்தை ஹரிஸ்வர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ளார்.

 

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பேரரசு, நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், பத்திரிகையாளர் முக்தார் அஹமத், இயக்குநர் கேபிள் சங்கர், நடிகர் ராஜசிம்மன் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய பிரபலங்கள் அனைவரும் இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் வேல்முருகனை வெகுவாக பாராட்டினார்கள். குறிப்பாக, பனை தொழிலாளிகளுக்காக ஒரு படத்தை தயாரித்ததை சுட்டிக்காட்டியதோடு, இந்த படத்தால் நஷ்ட்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, இந்த கதையை நிச்சயம் படமாக்க வேண்டும் என்ற உறுதியோடு இருந்து இப்படத்தை அவர் தயாரித்ததற்கு பிரபலங்கள் அனைவரும் அவரை பாராட்டினார்கள்.

 

இப்படம் தயாரித்தது குறித்து வேல்முருகன் பேசுகையில், ”இதில் ஏதோ நான் ரிஸ்க் எடுத்துப் படம் எடுத்து இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இயக்குநர் தான் பெரியதாக ரிஸ்க் எடுத்துள்ளார். முதல் படம் வெற்றிப் படம் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது ஒரு சவாலான படம்.இந்தப் படத்தை அவர் தனது முதல் படமாக எடுத்திருக்கிறார் என்றால் அது தான் பெரிய ரிஸ்க்.இந்தப் படம் நாம் மறந்துவிட்ட பல விஷயங்களைப் பேசுகிறது . இதை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.” என்றார்.

 

படத்தின் இயக்குநர் நந்தா லட்சுமணன் பேசுகையில், “இங்கே இருப்பவர்கள் தனித்தனி பெயர்களைக் கொண்டு தனித்தனி ஆட்களாகத் தெரிந்தாலும் நாங்கள் படத்தில் பணியாற்றும் போது ஒன்றாகத் தான் இருந்தோம். அவரவருக்கு என்று வேலைகள் இல்லாமல் அனைத்து வேலைகளையும் அனைவரும் செய்தோம்.ஒருவரிடம் திறமை இருக்கலாம் அந்த திறமையை அறிமுகப்படுத்தி மேலே உயர்த்துவதற்கு நல்ல நட்பு தேவை. அப்படி எனக்கு அமைந்த நண்பன் தான் டி.வி.வசந்தன். அந்த நண்பன் இல்லாவிட்டால் நான் இங்கு வந்து இருக்க முடியாது.அவன்தான் இந்தப் படத்தின் கலை இயக்குநராகவும் மற்றும் பல வேலைகளையும் பார்த்துக் கொண்டான். அதேபோல எனக்கு என் குடும்பமும் உறவினர்களும் மிகவும் ஆதரவாக இருந்தனர்.கல்லூரி முடித்து 2017 முதல் என்னால் குடும்பத்திற்கு எந்த வருமானமும் இல்லாத போதும் என்னை நம்பி அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். குறும்படங்கள் ஆல்பங்கள் என்று எடுத்து சினிமா பற்றி எதுவும் தெரியாத  எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்த எனது மாமா தயாரிப்பாளர் வேல்முருகனுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தான் அவர் சொல்வார். அந்த ஊக்கம் அனைவருக்கும் கிடைக்காது.அதேபோல் பனைமரம் சார்ந்த தகவல்களை அளித்த கவிதா காந்தி அவர்களுக்கும் நன்றி.” என்றார்.

 

Nedumi

 

பத்திரிகையாளர் முக்தார் அகமது பேசுகையில், “விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் இந்தப் படவிழாவில் ஒரு அரசியல்வாதி கூட இல்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நாங்களும் விவசாயிகள் தான், நாங்களும் தமிழர்கள் தான், நாங்களும் தமிழ்க் கலாச்சாரம் கடைப்பிடிப்பவர்கள் தான் என்றெல்லாம் அவர்கள் சொல்வார்கள். ஆனால் அவர்கள் சொல்வது ஒன்று, செயலில் ஒன்று என்றுதான் இருப்பார்கள். திருக்குறளைப் போலவே விவசாயிகளையும் செல்வாதிகள் வாக்கு அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

 

நான் என்றும் சொல்வேன் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள், ஆண்ட கட்சியையும் ஆளுகிற கட்சியையும் கூட நம்பலாம். ஆனால் தனியே நிற்கிறோம் என்று சொல்கிறார்களேஅவர்களை நம்பவே நம்பாதீர்கள். ஏனென்றால் தனியாக இருப்பவர்கள் ரகசிய உடன்பாடு செய்து கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள்..தனித்து என்று எவரும் இல்லை அவர்கள் ரகசிய கூட்டணியில் உள்ளார்கள்.அவர்களை நம்பாதீர்கள்.

 

பொங்கல் சமயத்தில் இரண்டு படங்கள் வந்தன, இவ்வளவு வசூல் இவ்வளவு வெற்றி என்று பேசிக்கொள்கிறார்கள். அந்தப் படங்களால் தமிழ் மக்களுக்கு என்ன லாபம்? என்ன நல்ல கருத்து பேசி இருக்கிறது? அந்தப் படங்கள் யார் கண்ணீரை துடைத்து இருக்கின்றன?

 

பத்திரிகையாளர்கள்  என்றும் மக்கள் பிரதிநிதியாக நின்று கேள்வி கேட்க வேண்டும். தொலைக்காட்சி பேட்டிகளை ஒரு காலத்தில் மக்கள் இது நமக்கு சம்பந்தம் இல்லாதது என்று மக்கள் கடந்து போனார்கள். நான் மக்கள் பிரதிநிதியாகக் கேள்வி கேட்க ஆரம்பித்த பிறகு தான் மக்கள் அதைக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.இவன் நம் சார்பில் நின்று கேள்வி கேட்கிறான் என்று நினைத்தார்கள். பத்திரிகையாளர்கள் ராணுவத்தினர்,காவல்துறையினரைப் ன்றவர்கள்.அவர்களைப் போலவே பத்திரிகையாளர்களும் நேரம் காலம் பார்க்காமல் உழைப்பவர்கள், தங்கள் வீட்டு இன்ப துன்பங்களை மறந்து களத்தில் நிற்பவர்கள். எந்த விழாக் கொண்டாட்டமும் அவர்களுக்குக் கிடையாது.மழையா? வெள்ளமா ?புயலா ? சுனாமியா?எங்கும் களத்தில் நிற்பவர்கள். அந்தப் பத்திரிகையாளர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

 

திராவிடம் தமிழ் தேசியம் என்கிற நிலையில் என்னை திருமா கவர்ந்த தலைவராக இருக்கிறார். அதேபோல் ரஜினிகாந்த் பற்றி நான் ஆயிரம் விமர்சனங்கள்செய்திருக்கிறேன்.கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவேன் என்றார். பிறகு அது தவறு என்று புரிகிற போது அதை மாற்றிக் கொள்ளும் துணிச்சல் அவருக்கு இருந்தது .கட்சி ஆரம்பிக்கவில்லை என்றார். இது ரஜினி கொடுத்துள்ள பாடம். அந்தத் தெளிவான முடிவு எடுத்தவகையில் அவர் என்னைக் கவர்ந்த ஒருவராகத் தெரிகிறார். இந்தப் படம் விவசாயிகளின் வாழ்க்கை பற்றிச் சொல்வதால் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், “நான் பொங்கல் விழாவுக்கு ஊருக்குச் சென்றிருந்தேன் தாமதமாக வரலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் இது மாதிரி படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்தப் பட விழாவிற்காக முன்னதாகவே வந்திருக்கிறேன். பனை மரத்திற்குத் தமிழ்நாட்டில் பல சிறப்புகள் உண்டு. பிற மரங்களுக்கு இல்லாத சிறப்புகள் பனை மரத்திற்குண்டு.பனை மரத்தில் தான் ஆண், பெண் என்று இரு வகைகள் உள்ளன. மற்றதெல்லாம்  நீரை உறிஞ்சி தான் வாழும். ஆனால் நீரே இல்லாத இடத்தில் கூட பனைமரம்  தானாக வளர்ந்து பலன் தரும். பனை மரத்தின் எல்லா பாகங்களும் பயன்படும். பனை ஓலை, மரம், பழம், கருப்பட்டி, நுங்கு, கள், பதநீர் என்று எத்தனை பயன்கள்! இப்படிப்பட்ட பனை மரத்தின் சிறப்புகளைப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பது மகிழ்ச்சி.

 

கள் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு கிடையாது .சிறிய போதை தரும் அவ்வளவுதான் உடலைக் கெடுக்காது.அப்படி இருந்தும் கள்ளுக்கடைகளை ஊருக்கு  ஒதுக்குப் புறமாக அந்தக்காலத்தில் வைத்தார்கள். ஆனால் இப்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் வந்து விட்டன. என்னைக் கேட்டால் டாஸ்மாக்கில் கள்ளை விற்கலாம் .அதற்கு ஒரு விலைய வைத்துக் கொள்ளுங்கள். உடலை கெடுக்கும் மதுவை விட ஊட்டச்சத்து நிறைந்த கள் எவ்வளவோ மேல். கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்.

 

இங்கே முக்தார் பேசும்போது பத்திரிகையாளர்கள் பற்றி எல்லாம் பேசினார். நான் மதிக்கும் பத்திரிகையாளர்கள் பலர் உண்டு. என்னை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் அவர்கள் தான். ஆனால் அவர்கள் கேள்வி கேட்கும் போது எல்லா கட்சிகளிடமும் ஒரே மாதிரி கேட்க வேண்டும். ஒருவரிடம் பணிந்து கேட்கிறார்கள், ஒருவரிடம் துணிந்து கேட்கிறார்கள். இந்தப் பேதங்கள் இருக்கக் கூடாது. இதுவா மக்கள் பிரதிநிதிகள் செய்யும் வேலை? மக்கள் பிரதிநிதிகள் என்றால் ஒரே மாதிரியான கண்ணோட்டத்துடன் அனைத்துக் கட்சிகளையும் பார்க்க வேண்டும். ஒரு கட்சியை மட்டும் கட்டம் கட்டி விமர்சிக்க கூடாது. பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கலாம், ஆனால் கேலி பேசக்கூடாது.

 

அதே சமயம் இது ஒரு சினிமா சம்பந்தப்பட்ட மேடை.இங்கே வந்து  அரசியல் பேசக்கூடாது.படத்தைப் பற்றிப் பேசி அதைப் பெருமைப்படுத்தி  வாழ்த்த வேண்டும் .அதை விட்டுவிட்டு திசை மாற்றி ,படத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தை மாற்றி விடக்கூடாது. நாம் அனைவரும் வாழ்த்தவே இங்கு வந்திருக்கிறோம்.” என்றார்.