Jan 27, 2023 04:08 PM

25ம் ஆண்டு சினிமா பயணத்தில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்! - மகிழ்ச்சியில் நடிகர் சம்பத் ராம்

25ம் ஆண்டு சினிமா பயணத்தில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்! - மகிழ்ச்சியில் நடிகர் சம்பத் ராம்

எந்த ஒரு பின்புலமும் இன்றி சினிமாவில் நுழைவதே பெரும் சவாலான காலக்கட்டத்தில் தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சம்பத் ராம். தொடர்ந்து சினிமாவில் பயணித்துக் கொண்டிருப்பவர். தமிழ் சினிமாவில் மட்டும் 211 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என்று பல மொழிகளில் பல வேடங்களில் நடித்து வரும் சம்பத் ராம், தற்போது 25ம் ஆண்டு சினிமா பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.

 

25 ஆண்டுகளாக பல மொழிகளில் நடித்து வரும் சம்பத் ராம், முக்கிய வில்லன் வேடத்தில் நடித்து கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படம் ‘மாளிகப்புரம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதோடு, சம்பத் ராமின் நடிப்பை கொண்டாட வைத்திருக்கிறது.

 

மோகன்லால், மம்மூட்டி என்று பெரிய நடிகர்களுடன் ஏற்கனவே பல மலையாளப் படங்களில் நடித்திருந்தாலும், தற்போது நடித்திருக்கும் ‘மாளிகப்புரம்’ திரைப்படம் எதிர்பாராத மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. படத்தின் ஹீரோ உன்னி முகுந்தனுக்கு இணையாக, வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கும் சம்பத் ராம், இப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

இந்த நிலையில், மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘மாளிகப்புரம்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, வெளியாகி வெற்றி பெற்றுள்ளது!

 

ஒரு பக்கம் பாராட்டு, மறுபக்கம் பட வாய்ப்புகள் என்று பிஸியாக இருக்கும் சம்பத் ராம், மாளிகப்புரம் படத்தின் வெற்றி குறித்தும், தற்போது நடித்து வரும் படங்கள் குறித்தும் நம்மிடையே பகிர்ந்துக்கொண்டது இதோ,

 

’விக்ரம்’ திரைப்படத்தில் நான் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தேன். அதை பார்த்துவிட்டு தான் ‘மாளிகப்புரம்’ தயாரிப்பாளர் எனக்கு ஒரு மெசஜ் அனுப்பினார். ”விக்ரம் படம் பார்த்தேன், நன்றாக நடித்திருக்கிறீர்கள், நான் ஒரு படம் செய்யப் போகிறேன், அதில் உங்களுக்கு முக்கிய வேடம் இருக்கிறது” என்று மெசஜ் அனுப்பியிருந்தார். அதன்படி, சில மாதங்களுக்கு பிறகு எனக்கு அழைப்பு வந்தது, சென்று நடித்தேன். இது மலையாளத்தில் எனக்கு 6 வது படம். என் முதல் படமே மோகன் லால் படம் தான், அதில் முக்கிய வில்லனாக நடித்தேன். பிறகு மம்முட்டி சார் என மலையாலத்தில் இதுவரை நான் நடித்த 6 படங்களும் பெரிய பெரிய நடிகர்கள் படங்கள் தான். ஆறாவது படமான மாளிகப்புரம் தான் சிறிய படம், ஆனால் அதன் வெற்றி மிகப்பெரியதாக அமைந்துவிட்டது. 

 

இதுவரை நான் நடித்த மலையாள படங்களை கேரளாவுக்கு சென்று நான் பார்த்ததில்லை, ஆனால் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து, கேரளாவுக்கு நான் சென்றேன். படக்குழுவுக்கு சொல்லாமல், சர்பிரைஸ் கொடுப்பதற்காக அவர்கள் பார்க்கும் திரையரங்கிற்கு சென்று நானும் படம் பார்த்தேன், அப்போதே தெரிந்தது இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும். அதேபோல் படம் கேரளாவில் பட்டிதொட்டியெல்லாம் வெற்றி பெற்று ஓடுகிறது. இந்த வெற்றியின் மூலம் என் 25 ஆண்டுகள் உழைப்புக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

 

Sampathram

 

மாளிகப்புரம் படம் மலையாளத்தில் எப்படி பெரிய வெற்றி பெற்றதோ அதுபோல் தமிழிலும் வெற்றி! படத்தை பார்த்தவர்கள் கண் கலங்குகிறார்கள். ஆன்மீகவாதிகளுக்கும், நாத்திகவாதிகளுக்கும் பிடிக்கும் படமாக இருப்பதால், தமிழகத்தில் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

 

’கே.ஜி.எப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’, 'நேனே நான்' ஆகிய தெலுங்கு படம்.  ’காசர கோல்ட்’, ‘சாலமன்’,  'தங்கமணி’ ஆகிய மூன்று மலையாளப் படங்கள்.  வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை', பா.இரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’, ’கட்டில்’, ‘கங்கனம்’, ’சூர்ப்பனகை’ ஆகிய படங்களோடு, ‘தி கிரேட் எஸ்கேப்’ மற்றும் 'தி பேர்ல் பிளட்' என்ற ஆங்கிலப் படத்தில் நடிக்கிறேன். இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் வீரப்பன் இணைய தொடரிலும் நடிக்கிறேன். இவை தான் என் நடிப்பில் வெளியாக வேண்டிய படங்கள்.

 

இதைதவிர, பல புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் வந்துக்கொண்டிருக்கிறது. அதுபற்றிய விவரங்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு சொல்கிறேன்.

 

என்று மகிழ்ச்சியோடு பேசிய சம்பத் ராமுக்கு 'மாளிகப்புரம்' மற்றும் சிரஞ்சீவியுடன் நடித்த 'வால்டர் வீரையா' படங்களின் வெற்றி பல புதிய பட வாய்ப்புகளை வழங்கி வருவதோடு, முக்கிய வேடங்களையும் பெற்று தந்துள்ளதாம்.