Jun 09, 2024 04:53 PM

பத்திரிகையாளர்களிடம் கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி!

பத்திரிகையாளர்களிடம் கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘மஹாராஜா’ படத்தை ‘குரங்கு பொம்மை’ பட இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருக்கிறார். தி ரூட் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டு படம் பற்றிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், ”ராமோஜிராவ் என்ற ஜாம்பவானின் மறைவு எனக்கு வருத்தம். அவருக்குத் தலை வணங்குகிறேன். என்னுடைய ஐம்பதாவது படமாக 'மகாராஜா' அமைந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  வினோத், கல்கி, அபிராமி, மம்தா மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் அவ்வளவு அழகாக வேலைப் பார்த்துள்ளனர். ஐம்பதாவது படம் வரை வந்திருக்கிறேன் என்றால் என் இயக்குநர்கள், மீடியா என எல்லோரும் தந்த திட்டும் பாராட்டும்தான் காரணம். இந்தப் படமும் பார்த்துவிட்டு சொல்லுங்கள். இந்த படத்துக்காக உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். முடிந்தவரை படத்தின் கதையை சொல்லாமல் விமர்சனங்கள் எழுதுங்கள், காரணம் ரசிகர்களுக்கு கதை தெரிந்துவிட்டால் சுவாரஸ்யம் இருக்காது, படத்தின் சஸ்பென்ஸும் தெரிந்துவிடும். இதை தான் இயக்குநரும் எதிர்பார்க்கிறார். மற்றபடி படம் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே எழுதுங்கள். அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன்.” என்றார்.

 

நடிகை அபிராமி பேசுகையில், ”விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படத்தில் நானும் ஒரு பார்ட் என்பதில் மகிழ்ச்சி. அவர் பெயரைக் கேட்டதுமே உடனே ஓகே சொல்லி விட்டேன். மற்ற எல்லாமே இந்தப் படத்தில் எனக்கு போனஸ்தான். படத்தில் எல்லோருமே திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர். யாரிந்த லட்சுமி என்ற கேள்விக்கு எனக்கும் பதில் தெரியாது. நீங்களும் யார் என்று தெரிந்து கொள்ள தியேட்டர் வந்து படம் பாருங்கள். நன்றி.” என்றார்.

 

இயக்குநர் நித்திலன் பேசுகையில், ”என்னுடைய டெக்னீஷியன்ஸ் எல்லோருமே திறமையானவர்கள். அவர்கள் இல்லாமல் இந்தப் படம் இல்லை. விஜய்சேதுபதி சார் தன்மையான மனிதர். செலவு பற்றி கவலைப்படாமல் எங்களுக்கு ஆதரவு கொடுத்த சுதன் சாருக்கு நன்றி. விஜய்சேதுபதி, அபிராமி, மம்தா என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படம் இது என்பதால் ரொம்பவே ஸ்பெஷல். நீங்கள் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.” என்றார்.

 

நடிகை மம்தா மோகன்தாஸ் பேசுகைஉயில், ”’எனிமி’ படத்திற்குப் பிறகு நல்ல கதை கொண்ட 'மகாராஜா' படம் மூலம் திரும்பி வந்திருப்பதில் மகிழ்ச்சி. இது வெறும் படமாக மட்டுமல்லாது, ஒரு அனுபவம். நான் நிறைய சீனியர் நடிகர்களோடு நடித்திருக்கிறேன். அவர்களில் இருந்து சேது சார் வித்தியாசமானவர். அவர் கரியரில் இன்னும் மிகப்பெரிய உயரத்தை அடைவார். நித்திலன் திறமையான இயக்குநர். படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

 

நடிகர் வினோத் பேசுகையில், ”’ராட்சசன்’ பட டீச்சரில் இருந்து ரிட்டையர்ட் ஆக வேண்டும் என நானும் நீண்ட நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கான கதையாக 'மகாராஜா' அமைந்துள்ளது. சேது அண்ணாவுடன் எனக்கு மூன்றாவது படம் இது. அவரின் வளர்ச்சி கடின உழைப்பால் படிப்படியாக வந்தது. அவருடைய சுறுசுறுப்பு நம் சோம்பேறித்தனத்தை தூர விரட்டி விடும். அனுராக் கஷ்யப் சாரிடம் நிறையக் கற்றுக் கொண்டேன். அபிராமி, மம்தா மோகன்தாஸ் இருவர் கூடவும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் சுதன் சாருக்கும் வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் நித்திலனுக்கும் நன்றி.” என்றார்.

 

Maharaja

 

எடிட்டர் ஃபிலோமின்ராஜ் பேசுகையில், ”இந்தப் படம் ஒரு பஸூல் போல தொடர்ந்து முடிச்சுகள் அவிழ்ந்து கொண்டே இருக்கும். அதனால், எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஆடியன்ஸோடு சேர்ந்து படம் பார்க்க நானும் ஆர்வமாக இருக்கிறேன்.” என்றார்.