Sep 25, 2018 11:58 AM

யு சான்றிதழ் பெற்ற முதல் திகில் படம் ‘ஆடவர்’! - 28 ஆம் தேதி ரிலீஸ்

யு சான்றிதழ் பெற்ற முதல் திகில் படம் ‘ஆடவர்’! - 28 ஆம் தேதி ரிலீஸ்

தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு திகில் படங்களின் வருகை அதிகரித்துக் கொண்டு இருந்தாலும், அவற்றில் சில வித்தியாசமான படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. அந்த வரிசையிலான ஒரு வித்தியாசமான முயற்சியோடு உருவாகியிருக்கும் படம் தான் ‘ஆடவர்’.

 

பெண்கள் நடிக்காத முதல் திரைப்படம், என்ற வித்தியாசமான முயற்சியோடு உருவாகியுள்ள இந்த ‘ஆடவர்’ படத்தில் ஒரு பிரேமில் கூட பெண்களை பார்க்க முடியாது என்றாலும், படம் பார்க்கும் ரசிகர்கள் அதனை உணராத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது இப்படத்தின் தனி சிறப்பம்சம் என்றும் சொல்லலாம்.

 

படம் முழுவதும் சீட் நுணியில் உட்கார வைக்கும் அளவுக்கு பல திருப்புமுனைகளோடு உருவாகியிருக்கும் இப்படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகிறது.

 

தம்பி தெய்வா மீடியா சார்பில் சொ.சிவக்குமார் பிள்ளை தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ராபர்ட், சரவணன், சிரஞ்சீவி, கார்த்தி ஆகிய நான்கு இளைஞர்கள் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்கள். கிரண் என்ற சிறுவன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதையின் திருப்பு முனையாக இருக்கும் சிறுவன் கிரணின் நடிப்பும், அவரது கதாபாத்திரமும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

 

‘தந்திரா’ என்ற திகில் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசின் விருது பெற்ற இசையரசர் தஷி, இசையமைத்திருக்கும் இப்படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. ஏற்கனவே பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தாலும், படத்துடன் சேர்த்து பார்க்கும் போது ரசிகர்களை தாளம் போட வைக்கும் விதத்தில் உள்ளது.

 

கானா உலகநாதன் இப்படத்தில் பாடிருக்கும் பாடல்கள், மீண்டும் ஒரு “வாள மீனுக்கும் வெளங்கு மீனுக்கும் கல்யாணம்” பாடலாக அமைந்திருக்கிறது.

 

இப்படம் குறித்து இசையமைப்பாளர் தஷி பேசும் போது, “’தந்திரா’ என்ற திகில் படத்திற்காக நான் கேரள அரசின் விருது பெற்றேன். அப்படத்தை தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், திகில் படங்களின் கதை தேர்வின் மிகவும் கவனம் செலுத்தி வந்தேன். அப்போது தான் பிரபல ஒளிப்பதிவாளர் ஸ்ரீரஞ்சன், முதல் முறையாக இயக்கும் இந்த ‘ஆடவர்’ படத்தின் கதையை என்னிடம் சொன்னார். கதையை கேட்டவுடன் இந்த படத்திற்கு இசையமைக்க சம்மதித்தேன்.

 

ஏராளமான பேய் படங்கள் வந்துக் கொண்டிருந்தாலும், அப்படங்களில் இருந்து ‘ஆடவர்’ ரொம்பவே தனித்துவமான கதையம்சம் கொண்டிருக்கிறது. மேலும், கிராபிக்ஸ் பயன்படுத்தாத ஒரு திகில் படமாக இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம்.

 

பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெற்றதைப் போல படத்தின் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவரும். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் கிரண் பெரிய அளவில் பாராட்டு கிடைக்கும். அந்த அளவுக்கு அவர் சிறப்பாக நடித்திருக்கிறார்.

 

2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நான்கு இளைஞர்கள் ஒரு வீட்டுக்குள் செல்கிறார்கள். அப்படி செல்லும் அவர்களுக்கு அந்த வீட்டில் இருக்கும் ஒரு அமானுஷ்ய சக்தியால் பிரச்சினை ஏற்பட, அதில் இருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள், அந்த அமானுஷ்ய சக்தியின் பின்னணி என்ன, என்ற ரீதியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. வெறும் திகில் படமாக, ரசிகர்களை பயமுறுத்துவதை மட்டும் இயக்குநர் செய்யவில்லை. படத்தில் நல்ல மெசஜையும் சொல்லியிருப்பவர், 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பின் பின்னணி குறித்தும், அதுபோன்ற பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்பது குறித்தும் ரொம்ப தெளிவாக விளக்கியிருக்கிறார். அக்காட்சிகள் ரசிகர்களை நிச்சயம் கவரும்.

 

படத்தை பார்த்தை சென்சார் அதிகாரிகள், படத்தில் நடிகைகள் இல்லாதது தெரியாமலேயே படம் பார்த்தார்கள். பொதுவாகப் பேய் படங்கள் என்றாலோ ரொம்ப கோரமாக இருப்பது வழக்கம் என்பதால், படத்திற்கு கட் கொடுக்கும் எண்ணத்தில் இருந்த அவர்கள், முழு படத்தையும் பார்த்துவிட்டு ரொம்பவே ஆச்சர்யப்பட்டார்கள். ”பேய் படத்தை இப்படியும் சொல்லலாம், என்று புதிய வழியை காட்டியிருக்கிறீர்கள். நடிகைகளையே நடிக்க வைக்கவில்லை, இருந்தாலும் படத்தில் அந்த உணர்வு ஏற்படாத வகையில் திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கிறது” என்று கூறி பாராட்டியதோடு யு சான்றிதழும் வழங்கினார்கள்.

 

அறிமுக நடிகர்கள் நடித்திருந்தாலும், அவர்களது நடிப்பு அவர்களை அனுபவம் மிக்க நடிகர்களாகவே காட்டியிருக்கிறது. சுமார் 75 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் பிரபல ஒளிப்பதிவாளர் ஸ்ரீரஞ்சன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருப்பதும் இப்படத்தின் தனி சிறப்பு.” என்றார்.

 

Aadavar