May 23, 2023 11:54 AM

அரசியல் ஏரியாவில் அதிர்வை உண்டாக்கிய ‘ஆதாரம்’ டிரைலர்! - இயக்குநர் கவிதாவின் தைரியத்தை பாராட்டிய பிரபலங்கள்

அரசியல் ஏரியாவில் அதிர்வை உண்டாக்கிய ‘ஆதாரம்’ டிரைலர்! - இயக்குநர் கவிதாவின் தைரியத்தை பாராட்டிய பிரபலங்கள்

மறைந்த பிரபல இயக்குநர் டி.என்.பாலுவின் மகளும் பிரபல டப்பிங் கலைஞருமான கவிதா, ‘ஆதாரம்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். 

 

மேட்னி ஃபோக்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரித்திருக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.  இவர்களுடன் நடராஜன் (கனடா), கதிரேசன், செந்தில் நடராஜன் (கனடா), ராதா ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், கதிரவன் பாலு , கார்த்திக், சக்தி (கனடா) வெங்கடேஷ் ஆறுமுகம் (அசத்த போவது யாரு) தென்காசி நாதன் வினோத் (KPY) டாக்டர்.அமுதா குமார், ஜீவா கார்த்திக், அஷ்வின் சுதந்திரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

என்.எஸ்.ரஜேஷ் குமார் மற்றும் ஸ்ரீவட்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தர்ம பிரகாஷ் இசையமைத்துள்ளார். சங்கர் கலை இயக்குநராக பணியாற்ற கவிதா மற்றும் ராசி தங்கதுரை வசனம் எழுதியுள்ளனர். குன்றத்தூர் பாபு சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

 

சமூக அக்கறை கொண்ட படைப்பாக, தீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள இப்பட்டத்தில் தமிழகத்தின் நடந்த மிக முக்கியமான அரசியல் நிகழ்வும், அதை சுற்றிய சில ரகசியங்களும் பேசப்பட்டிருப்பதோடு, பல அரசியல் உண்மை நிகழ்வுகளின் இருட்டு பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் விதத்தில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், ‘ஆதாரம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் மிஷ்கின், சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, டிரைலரில் பேசப்பட்டிருக்கும் அரசியல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருப்பதோடு, நிச்சயம் இப்படத்திற்கு எதிராக குறிப்பிட்ட அரசியல் கட்சியில் இருந்து எதிர்ப்பு வரலாம், என்றும் கணிக்கப்பட்டது.

 

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இயக்குநர் மிஷ்கின் பேசுகியில், “ஒரு பத்திரிக்கையாளர் வந்தவுடனே நல்ல கண்டண்ட் தாருங்கள் என்றார், என்ன கண்டண்ட் எனத் தெரியவில்லை. சகோதரி கவிதா என்னை வந்து அழைத்தார். நான் வந்து பேசினால், ஏதாவது திட்டி அது வைரல் ஆகிவிடுகிறது என்பதால் என்னை எல்லா பங்ஷனுக்கும் அழைத்து விடுகிறார்கள். ஆனால் கவிதா அவர்களின் முகவரி என்னை இங்கு அழைத்து வந்துவிட்டது அவரது தந்தை TN பாலு அவர்களின் படங்களான சங்கர்லால் முதல், பல படங்களுக்கு நான் ரசிகன். அந்தப்படத்தின் பாதிப்பில் தான் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு தொப்பி வைத்தேன். தமிழ் சினிமாவில் காப்பி காப்பி என்கிற குற்றச்சாட்டு வந்து கொண்டே இருக்கிறது. என் மீதே நிறைய குற்றச்சாட்டு இருக்கிறது. உலகம் முழுக்கவே ஆறு கதைகள் தான் அது தான் திரும்ப திரும்ப எடுக்கப்படுகிறது. எல்லோருமே ஒரே கதையை தான் திரும்ப திரும்ப எடுத்து வருகிறோம். கவிதாவை என் மகளாகவே பார்க்கிறேன். அவர் இது என் முதல் படம் குறைந்த நாளில் தான் எடுத்தேன், அடுத்த படம் தான் நன்றாக எடுக்க போகிறேன், என்றார். அந்த உண்மைக்காக அவரைப்பாராட்ட வேண்டும். என் முதல் படம் ஏழு நாள் தோல்வி தான். பின் எட்டாவது நாளில் தான் என் படம் ஓடி வெற்றியடைந்தது. தோல்வியிலிருந்து தான் படம் செய்வதை கற்றுக்கொள் வேண்டும்.  நான் லியோவில் சின்ன கேரக்டர் தான் செய்துள்ளேன். சிவகார்த்திகேயன் படத்தில் இப்போது தான் நடித்து முடித்துள்ளேன். இந்த அப்டேட் எங்கு போனாலும் கேட்கிறார்கள் அதனால் சொல்லி விட்டேன். இந்தப்படம் அனைவரும் கஷ்டப்பட்டு உண்மையாக உழைத்து உருவாக்கியுள்ளார்கள் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் கவிதா பேசுகையில், “இந்த விழாவிற்கு வருகை தந்த மிஷ்கின். ஒய் ஜி மகேந்திரன் சரவணன் ஆகியோருக்கு நன்றி. இந்தப்படத்தில் என்னுடன் இணைந்து உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள். எல்லோர் வீட்டிலும் ஒரு வாலு இருப்பார்கள்  என் வீட்டில் வாலாக இருந்தது நான் தான். இது என் முதல் படம் என் தந்தை TN பாலு இதை உரக்க இங்கு சொல்கிறேன். என்னுடைய தந்தை இவ்வளவு பெரிய ஆளாக இருக்கிறார் யாரும் நம்மை கண்டுகொள்ளவில்லையே என தோன்றியது ஆனால் இந்த விழாவிற்கு மிஷ்கின் சார் வந்த காரணம் என் தந்தை, ஒய் ஜி மகேந்திரன்  சார் நடிக்க காரணம் என் தந்தை. இந்த பெருமை போதும் எப்போதும் பழையதை மறக்காதீர்கள், புதுப்பித்துக்கொண்டே இருங்கள். என் புரடியூசர் ஒரு பிச்சைக்காரன்.  பிச்சைக்காரன் படத்திற்கும் அவருக்கும் ஒரு சம்பந்தமுண்டு அதனால் அவரை அப்படி கூப்பிட்டு பழகிவிட்டோம். என்னுடைய படம் சிசிடிவி பற்றியதல்ல, பதிந்த விசயத்தை மறைக்கப்பட்டது பற்றித்தான் என் படம். ஒரு உண்மை சம்பவத்தை வைத்து கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ளோம். என் படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை.” என்றார்.

 

எங்கேயும் எப்போதும்  இயக்குநர் சரவணன் பேசுகையில், “கவிதாவை நீண்ட நாட்களாக எனக்கு தெரியும் காரணம் அவரின் தைரியம், அவர் எடுத்துக்கொண்ட கதையை எடுக்க தைரியம் வேண்டும் அவருக்கு அந்த தன்னம்பிக்கை இருக்கிறது.  படம் வெற்றி பெற  என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் பிரதீப் பேசுகையில், “நண்பர்களால் தான் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டவன் நான். இந்த இடத்தில் நான் நிற்க காரணம் அவர்கள் தான். அப்ஷா மைதீன் இன்று வர முடியவில்லை. அவருக்கும் சேர்த்து உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். நண்பர்களால் தான் இந்தப்படம் செய்துள்ளேன்.” என்றார்.

 

Aadharam Movie Team

 

நடிகர் கதிரவன் பேசுகையில், “இயக்குனர் டி.என்.பாலுவை ஞாபகம் வைத்துக் கொண்டு அவருக்காக இங்கு வந்த இயக்குநர் மிஷ்கின் அவர்களுக்கு நன்றி , என் அப்பா அந்த காலத்தில் படம் எடுக்கும்போது எங்களை விட மிகவும் தைரியமாக இருந்தார், இந்த படத்தின் கதை அரசியலில் ஒரு  பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்,  அதற்காக இயக்குநர் கவிதாவிற்கு நன்றி.  மட்டும் ஒட்டு மொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள், நன்றி.” என்றார்.

 

ஒய்.ஜி.மகேந்திரன் பேசுகையில், “நான் நிறைய தப்பு செய்திருக்கிறேன் ஆனால் இந்தப்படத்தில் எனக்கு கொடுத்த கதாபாத்திரம் நீதிபதி, TN பாலு சார் மக்களை நன்கு புரிந்து கொண்ட இயக்குநர் அவரின் வாரிசு இப்படி ஒரு படத்தை எடுப்பதில் ஆச்சர்யம் இல்லை, அவருக்கு தவறு என தெரிந்த விஷயத்தை தைரியமாக சொல்ல நினைத்துள்ளார், கதை அருமையாக நகரும் அது படம் பார்க்கும்போது தெரியும், இந்தப் படம் கண்டிப்பாக பல சர்ச்சைக்கு உள்ளாகும் ஆனாலும் அது ஒரு முயற்சிதான் மக்கள் அதற்கு கண்டிப்பாக ஆதரவு தருவார்கள் நன்றி.” என்றார்.

 

கதாநாயகி பூஜா பேசுகையில், “இந்தப் படத்தில் நான் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி , இந்த நிகழ்வுக்காக பல நாட்கள் ஏங்கியுள்ளேன் இப்போது அது உண்மையாக நடப்பது  மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்தப் படத்தில் என்னை நம்பி எனக்கு இந்த கதாபாத்திரத்தை அளித்த  இயக்குநர் கவிதாவிற்கு நன்றி , தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி, ஒவ்வொரு நாளும் எனக்கு ஆர்வமாக இருந்தது , படக்குழு அனைவருக்கும் எனது நன்றி , பத்திரிக்கையாளர்கள் இந்த படத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும், இது அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்,  அனைவருக்கும் நன்றி” என்றார்.

 

படத்தொகுப்பாளர் டாய்ஸ் பேசுகையில், “இந்தப் படத்தில் இயக்குநர் கவிதாவின் பங்களிப்பு மிகவும் பெரியது , இங்கு வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் நன்றி, இந்தப் படம் மிகப்பெரும் பொதுநலத்தை பற்றி பேசும் படம், மக்கள் இதற்கு ஆதரவு தர வேண்டும், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.” என்றார்.

 

அனைத்து பணிகளும் முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் ‘ஆதாரம்’ விரைவில் திரைக்கு வர உள்ளது.