Nov 29, 2020 03:03 PM

போட்டோ ஷூட்டில் அதிரடி காட்டிய ‘ஆதிக்க வர்க்கம்’

போட்டோ ஷூட்டில் அதிரடி காட்டிய ‘ஆதிக்க வர்க்கம்’

தமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் தயாரிக்கப்படும் படம் ‘ஆதிக்க வர்க்கம்’. சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் பகவதி பால கதை, திரைக்கதை எழுதி இயக்குவதோடு, படத்தில் முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளார். மேலும், ராஜீவ் ரெட்டி, நக்மா, பிருந்தா, சக்திவேல், தனசேகர், அருங்கால் ரவி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

 

ஆதிக்க வர்க்கத்திற்கும், அடிமை வர்க்கத்திற்கும் இடையே நடைபெறும் மோதலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் கதை, 1863 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.

 

ஏ.சி.அன்பு, முத்து.ஜி ஆகியோர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அருங்கால் ரவி வசனம் எழுதுகிறார். விஜய் பிரபு இசையமைக்க, லட்சுமணன் படத்தொகுப்பு செய்கிறார். சுதந்திர தாஸ், சந்திரிகா ஆகியோர் பாடல்கள் எழுத, மிரட்டல் செல்வா ஆக்‌ஷன் காட்சிகளை வடிமைக்கிறார். மதி ஒளி குமார் மக்கள் தொடர்பாளர் பணியை கவனிக்கிறார்.

 

இப்படத்தின் போட்டோ ஷூட் நிகழ்வு சமீபத்தில் சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்றது. அதில் இயக்குநர் பகவதி பாலா உள்ளிட்ட படத்தின் முழு நடிகர்கள் பட்டாளே கலந்துக் கொண்டார்கள். அதிலும், நடிகர், நடிகைகள் ஒவ்வொரு கையிலும் படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் டம்மி அறுவா, துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இருக்க, அதனால் அப்பகுதியில் சில மணி நேரங்கள் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.

 

Aadhikka Varkkam

 

படத்தின் போட்டோ ஷூட்டே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், ’ஆதிக்க வர்க்கம்’ படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இப்படம் குறித்து இயக்குநர் பகவதி பாலாவிடம் கேட்ட போது, “உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைத்திருக்கிறேன். படத்தின் தலைப்பே இது எப்படிப்பட்ட படம் என்பதை புரிய வைத்துவிடும். இருந்தாலும், படத்தில் எதிர்பாராத சில காட்சிகளும், விறுவிறுப்பான திரைக்கதையும் ரசிகர்களை ஈர்க்கும். தமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அமைப்புக்காக தான் இப்படத்தை தயாரிக்கிறோம். தயாரிப்பு செலவு போக வரும் வருமானம் முழுவதையும், தமிழ் நடிகர்கள் பாதுகாப்புக்கு அமைப்புக்கும், அந்த அமைப்பில் உள்ள உறுப்பினர்களின் நலத்திட்டங்களுக்கும் செலவு செய்யப்படும்.” என்றார்.