உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யும் நடிகர் ஆதி!
’மிருகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான ஆதி, தொடர்ந்து ‘ஈரம்’, ‘அய்யனார்’, ‘அரவான்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க நடிகராக உயர்ந்தார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்குப் படங்களிலும் நடித்து வருபவர், தற்போது ‘பார்ட்னர்’, ‘குட்லக் சக்தி’, ‘கிளாப்’ ஆகிய தமிழ்ப் படங்களிலும், ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உதவி இயக்குநர்களுக்கு உதவும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆதி, அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை தனது குழுவினருடன் சேர்ந்து வழங்கி வருகிறார்.
சினிமாவையே நம்பியிருக்கும் பலர் கொரோனா ஊரடங்கினால் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு பல சினிமா பிரபலங்களும், சினிமா சங்கங்களும் உதவி செய்து வரும் நிலையில், ஆதி தனது பங்கிற்கு உதவி இயக்குநர்களின் துயர் துடைக்கும் வகையில், தனது ‘லெட்ஸ் பிரிட்ஜ்’ (Let's Bridge) குழுவின் மூலமாக, கஷ்ட்டப்படும் உதவி இயக்குநர்களின் விவரங்களை சேகரித்தார்.
பிறகு அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தனது குழுவினருடன் வழங்கினார். அந்த வகையில், கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், கே.கே.நகர், நெசப்பாக்கம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், ராமாபுரம், போரூர், நெற்குன்றம், தி.நகர் போன்ற பகுதிகளுக்கு நேரடியாக தனது குழுவினருடன் சென்ற ஆதி, கையுறை, முககவசம் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு உபகரணங்களோடும், சரியான சமூக இடைவெளியை பின்பற்றியும் உதவி பொருட்களை வழங்கினார்.
இது குறித்து ஆதியிடம் கேட்டதற்கு, “இருள் சூழ்ந்த காலமெனினும் எம் சினிமா நண்பர்கள் மன உறுதியையும், நம்பிக்கையை இழக்காமல் இருக்க, எங்கள் கடமையை செய்தோம்” என்றவர், “ஒற்றுமையாய் வாழ்வோம்...! நாளை வெற்றி நிச்சயம்...” என்று கூறி, உதவியோடு நம்பிக்கையும் அளித்தார்.