படம் பார்க்க வருபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர் துரை சுதாகர்!
‘களவாணி 2’ படத்தில் வில்லனாக அறிமுகமான துரை சுதாகர், அப்படத்தை தொடர்ந்து வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ‘டேனி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், சமூக சேவைகளில் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.
தஞ்சாவூரை சேர்ந்த துரை சுதாகரை, அப்பகுதி மக்கள் பப்ளிக் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். அதற்கு ஏற்றவாறு தனது மக்களையும், தஞ்சை மண்ணையும் அளவுக்கு அதிகமாக நேசிக்கும் நடிகர் துரை சுதாகர், சமீபத்தில் நடைபெற்ற தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை, தனது ரசிகர் மன்றம் மூலம் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தார். அந்த வகையில், தஞ்சையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொண்டு இளைஞர்களை ஊக்குவித்து வருகிறார்.
இந்த நிலையில், மரம் நடுவது குறித்தும், இயற்கையை நேசிப்பது குறித்தும் இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்த நடிகர் துரை சுதாகர், அதை வித்தியாசமான முறையில் நடத்தியிருக்கிறார். ஆம், காதலர் தினமான நேற்று (பிப்.14) படம் பார்க்க திரையரங்கத்திற்கு வரும் ரசிகர்களுக்கு நடிகை துரை சுதாகர் மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தஞ்சாவூர் ஜி.வி.காம்ப்ளக்ஸில், ஓடிக்கொண்டிருக்கும் ‘நான் சிரித்தால்’ படத்தை காண வந்த ஆயிரம் ரசிகர்களுக்கு நடிகர் துரை சுதாகர் மரக்கன்றுகள் வழங்கி, இளைஞர்களிடம் மரம் வளர்ப்பது மற்றும் இயற்கையை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். துரை சுதாகரின் இந்த முயற்சியை படம் பார்க்க வந்த ரசிகர்கள் மட்டும் இன்றி டெல்டா மாவட்ட மக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை மகேந்திரன், தஞ்சை குணா மற்றும் நடிகர் துரை சுதாகரின் ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு செய்தனர்.