செந்நாய்களை வேட்டையாடிய நடிகர் கிருஷ்ணா! - சுற்றிவளைத்த அதிரடிப்படை

மேற்கு தொடர்ச்சி மலையில் செந்நாய்களை வேட்டியாடிய நடிகர் கிருஷ்ணாவை அதிரடிப்படை சுற்றிவளைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப் பகுதியான கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா நடித்து வரும் ‘கழுகு 2’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தனியாருக்கு சொந்தமான இடத்தை சுற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காடு உள்ளது.
இந்த நிலையில், நடிகர் கிருஷ்ணா செந்நாய்களை வேட்டையாடும் காட்சி படமாக்கப்பட்டது. ஆகாயத்தில் பறந்தவாறு செந்நாய்களை குறி தவறாமல் கிருஷ்ணா சுட வேண்டும். இதற்காக அடந்த காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா ஒரிஜினல் துப்பாக்கியை வைத்து, துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்து கொண்டார். தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டதால் பீதியடைந்த மக்கள் மாவோயிஸ்டுகள் ஆயுத பயிற்சி மேற்கொள்வதாக தகவல் தெரிவித்ததையடுத்து, அந்த பகுதிக்கு வந்த அதிரடிப்படையினர் துப்பாக்கி முனையில் நடிகர் கிருஷ்ணாவையும், அவரது உதவியாளர்களையும் சுற்றி வளைத்தனர்.
அருகில் சென்று பார்த்த போது தான், அது திரைப்படத்திற்கான ஒத்திகை என்பது தெரிய வந்தது இருப்பினும் துப்பாக்கியை ஆய்வு செய்த காவல்துறையினர், அது ஒரிஜினல் துப்பாக்கி என்றும், லைசென்சை காண்பித்து விட்டு துப்பாக்கியை பெற்று செல்லுமாறும் கூறியுள்ளனர்.
சென்னையில் இருக்கும் இந்த துப்பாக்கிகளுக்கு சொந்தக்காரரான கன் ராஜ், தற்போது லைசென்சுடன் கேரளாவுக்கு விரைந்துள்ளார்.