Apr 22, 2021 04:28 AM

சொன்னதை செய்து காட்டிய சிலம்பரசன்!

சொன்னதை செய்து காட்டிய சிலம்பரசன்!

மறைந்த நடிகர் விவேக்கின் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் கனவை நனவாக்கும் பணியில் பலர் ஈடுபட தொடங்கியுள்ளார்கள். சமூக ஆர்வலர்கள் மட்டும் இன்றி நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும், விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வருவதோடு, அப்பணியை தொடர்ந்து செய்யப்போவதாகவும் அறிவித்து வருகிறார்கள்.

 

அந்த வகையில், சமீபத்தில் சென்னையில் தொடங்கிய ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பில் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய படக்குழுவினர் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்று நட்டுள்ளனர்.

 

இந்த நிகழ்வில் ’மாநாடு’ பட நாயகி கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன், அஞ்சனா கீர்த்தி, ஸ்டன்ட் சில்வா, ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன், இயக்குநர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோரும் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். 

 

Maanaadu

 

விவேக்கின் கனவை நனவாக்கும் விதமாக, ஆளுக்கொரு மரமாவது நடுவதுதான் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும், என்று ஏற்கனவே கூறியிருந்த நடிகர் சிலம்பரசன் தற்போது அதை செய்து காட்டியதோடு, தொடர்ந்து மரக்கன்றுகள் நடுவதில் தான் ஆர்வம் காட்டப்போவதாக, கூறியதோடு தனது ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் அனைவரும் ஆளுக்கொரு மரம் நட்டு, விவேக் கண்ட கனவை நனவாக்க வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.