Aug 28, 2018 03:31 PM

மோகன் ராஜா அறிவித்த ‘தனி ஒருவன் 2’ - அவாய்ட் பண்ணும் அரவிந்த்சாமி?

மோகன் ராஜா அறிவித்த ‘தனி ஒருவன் 2’ - அவாய்ட் பண்ணும் அரவிந்த்சாமி?

2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மோஜன் ராஜா, தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்த நிலையிலும், ஏன், விஜய் போன்ற மாஸ் ஹீரோவை வைத்து வெற்றிப் படம் கொடுத்திருந்தாலும், அவரை இயக்குநர் என்று நெஞ்சை நிமிர செய்த படம் என்னவோ 2015 ஆம் ஆண்டு வெளியான ‘தனி ஒருவன்’ தான்.

 

காரணம், தொடர்ந்து ரீமேக் படங்களாக இயக்கி வந்த மோகன் ராஜா, இயக்கிய முதல் நேரடி திரைப்படம் ‘தனி ஒருவன்’. தனது தம்பி ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து, அவர் இயக்கிய அப்படம் மோகன் ராஜாவின் ரீமேக் இமேஜை உடைத்தெறிந்ததோடு, கோடம்பாக்கமே அவரை திரும்பி பார்க்க வைத்தது. 

 

Mohan Raja

 

வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப் பெற்ற ‘தனி ஒருவன்’ மோகன் ராஜாவுக்கு முக்கியமான படமாக அமைந்தது போல, நடிகர் அரவிந்த்சாமிக்கும் முக்கியமான படமாக அமைந்தது.

 

சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த அரவிந்த்சாமி, தற்போது மீண்டும் ஹீரோவாக வலம் வர ‘தனி ஒருவன்’ மிக முக்கிய காரணம். அப்படத்தில் வில்லனாக அவர் நடித்தாலும் ஹீரோவுக்கு நிகரான வேடமாக அவரது வேடம் இருந்ததோடு, ரசிக்கும்படியான வில்லன் வேடமாகவும் இருந்தது. இதையடுத்து, தொடர்ந்து வில்லன் வேடம் வந்தாலும், ஒரு சில படங்களோடு தனது வில்லன் அவதாரத்தை கலைத்துவிட்டு, தற்போது ஒன்லி ஹீரோ என்ற பாலிசியோடு கோடம்பாக்கத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

 

aravindswamy

 

இந்த நிலையில், ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை ‘தனி ஒருவன் 2’ என்ற தலைப்பில் மோகன் ராஜா இயக்கப் போகிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். ஹீரோ ஜெயம் ரவி என்பது உறுதி. ஆனால், முதல் பாகத்தில் ஹீரோவுக்கு நிகராக இருந்த வில்லன் வேடம் இந்த இரண்டாம் பாகத்தில் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதில் மீண்டும் அரவிந்த்சாமி நடிப்பாரா? என்பது இன்னும் உறுதியாகவில்லை.

 

அதுமட்டும் அல்ல, ‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு ‘போகன்’ படத்தின் மூலம் மீண்டும் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடித்த அரவிந்த்சாமிக்கு, அப்படத்திலும் ஹீரோவுக்கு நிகரான வேடம் அமைந்தாலும், அப்படத்தின் புரோமோஷன் போது அவர் ஓரம் கட்டப்பட்டதாக கூறப்பட்டது. தயாரிப்பு தரப்பு ஜெயம் ரவியை மட்டுமே போகஸ் செய்து விளம்பரங்களை செய்து வந்ததால் அப்செட்டான அரவிந்த்சாமி, தனது சொந்த செலவில் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டார். இதனால், ஜெயம் ரவிக்கும் அவருக்கும் லேசான மனகசப்பு ஏற்பட்டதாம். இதனால் இனி வில்லனாக நடிக்க கூடாது என்று அரவிந்த்சாமி முடிவும் செய்துவிட்டாராம்.

 

Aravindsamy and Jeyam Ravi

 

இதனால், ‘தனி ஒருவன் 2’ படத்திற்காக மீண்டும் அரவிந்த்சாமி அழைக்கப்பட்டாலும், அவர் நடிப்பார் என்பது சந்தேகம் தான். அதிலும் அவர் ஹீரோவாக கைவசம் பல படங்கள் இருப்பதால் நிச்சயம் ‘தனி ஒருவன் 2’ வை அவர் அவாய்ட் செய்வார் என்றே கூறப்படுகிறது.