Mar 24, 2021 03:05 AM

இயக்குநர் வெற்றிமாறனுக்கு விழா எடுத்த ‘அசுரன்’ படக்குழு!

இயக்குநர் வெற்றிமாறனுக்கு விழா எடுத்த ‘அசுரன்’ படக்குழு!

2019 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில், சிறந்த தமிழ்த் திரைப்படமாக அசுரன் தேர்வு செய்யப்பட்டதோடு, சிறந்த நடிகருக்கான விருதுக்கு ‘அசுரன்’ படத்திற்காக தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

ஏற்கனவே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற ‘அசுரன்’ படத்திற்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேசிய விருது கூடுதல் அங்கீகாரத்தை வழங்கியிருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி சொல்லும் விதமாக, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில், அசுரன் படக்குழுவினர் விழா ஒன்றை ஏற்பாடு செய்தனர்.

 

சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நேற்று மாலை நடைபெற்ற இவ்விழாவில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, “இன்றைய சூழலில் தம்பி வெற்றிமாறனை அறிமுகப்படுத்தியது தம்பி தனுஷ் தான். தனுஷ் தம்பி சொல்லும் போது வெற்றியோடு நாம் பண்ணுவோம் என்றார். வருங்கால இயக்குநர்கள் வெற்றியைப் பின்பற்ற வேண்டும். ஒரு கட்டத்தில் வெற்றிமாறன் என்னிடம் சார், இந்தப்படத்திற்காக வாங்கிய பணத்தை தந்துவிடுகிறேன் என்று சொன்னார். தேதி குறிப்பிட்ட பின் அவர் தன்னை வருத்தி வேலை செய்தார். அவரிடம் இருக்கும் உழைப்பு தான் அவரை உயர்த்துகிறது. படத்தின் எடிட்டிங் நேரத்தில் அவருக்கு சிக்கன்குணியா நோய் வந்துவிட்டது. ஆனாலும் அதைத்தாங்கிக் கொண்டு வேலை செய்தார். அவரின் இலக்கு பணமல்ல வெற்றி தான். அதுக்குத் தான் அவருக்கு வெற்றிமாறன் என்ற பெயர். வெற்றிமாறனின் உழைப்புக்கு நான் என்றும் உதவியாக இருப்பேன். என்றும் அவருக்கு நான் உறுதுணையாக இருப்பேன். இன்னும் இந்தப்படத்தில் நிறையபேர்களுக்கு விருது கிடைத்திருக்க வேண்டும். குறிப்பாக ஜீவி பிரகாஷுக்கு இசைக்கு என்று நம்பினேன். நடிகர் தனுஷுக்கு இந்த விருது கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. முதல் ரவுண்டிலே தனுஷுக்கு விருதை எடுத்து வைத்துவிட்டார்கள். 1992-ல் எனக்கு பாலுமகேந்திரா எனக்கு ஒரு விருது வாங்கிக் கொடுத்தார். அதன்பிறகு தம்பி வெற்றிமாறன் வாங்கிக் கொடித்திருக்கிறார். அதற்காக நடிகர் தனுஷுக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்” என்றார்.

 

வெற்றிமாறன் பேசுகையில், “ஒரு படம் பண்னும் போது அந்தப்படத்தோடு சம்மந்தப்பட்டவர்களுக்கு நன்றி சொல்லும் ஒரு மேடை கிடைக்கும். ஆனால் எங்களுக்கு ரெண்டு மேடை கிடைத்துள்ளது. இந்தப்படத்தில் சமூகநீதிக்கான ஒரு உரையாடல் இருந்தது. அதேநேரம் இந்தப்படத்தை மெயின்ஸ்ட்ரீம் படமாக பண்ணவும் செய்தோம். இந்த மாதிரியான விருது படத்தில் உழைத்தவர்களுக்கு ஒரு உற்சாகம் தரக்கூடியது. மீடியா இந்தப்படத்தை கொண்டு சேர்த்தது. வணிக வெற்றிக்கு மீடியா ஒத்துழைப்பு கொடுத்தது. ஒரு படம் நல்லா வரும்னா அது தன்னைத் தானே சரியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும். இந்தப்படத்தில் எனக்கு நிறைய சப்போர்ட் கிடைத்தது. குடும்பம் மனைவி அக்கா, அப்பா, குழந்தைகள், மற்றும் என் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. என் உதவி இயக்குநர்கள் மிகுந்த மனபலம் வாய்ந்தவர்கள். என் எமோஷ்னல் கோபத்தை எல்லாம் தாங்கிக்கொள்வார்கள். என் கேமராமேன் வேல்ராஜ் சார் ரொம்ப நேர்த்தியாக செய்திருந்தார். ஜீவி பிரகாஷ் பேக்ரவுண்ட் சாங்ஸ் ரொம்ப ஸ்பெசலா இருந்தது. ஜாக்சன் நான் தயாரிப்பாளரிடம் போடுற சண்டையை அவர் போட்டுவிடுவார். அவருக்கும் நன்றி. ராமர் மேடைக்கு வந்தாலே பயம்.. எடிட்டிங் வேலையை அவர் எனக்காக காத்திருந்து காத்திருந்து செய்தார். அவருக்கு நன்றி. எனக்கு கிடைக்கும் நடிகர்கள் எல்லாருமே எனக்கு கிடைத்த கிப்ட். கென் தான் இந்தக்கதைக்கு முதல் தொடக்கம். சிவசாமிக்காக கூட ரெண்டு மூனு பேரிடம் போய், அதன்பின் தான் தனுஷ் வந்தார். கென்னை தனுஷ் நன்றாக ஊக்கப்படுத்தினார். மஞ்சுவாரியார் நடிப்பு தான் இந்தப்படத்தை குடும்பத்திற்கான படமாக மாற்றினார். தனுஷ் எப்போதும் போல என்னை நம்பி நடித்தார். தனுஷிடம் கதை சொன்னதும், அவர் யார் மகன் கேரக்டர் என்று கேட்டார். அதுவே ஆச்சர்யமாக இருந்தது. தாணு சார் இந்த கதையை நாலுபக்கம் படித்துவிட்டு ஓ.கே பண்ணுவோம் என்றார். ரொம்ப ஸ்ட்ரெஸ்புல் வொர்க்காக இருந்தது. குறிப்பாக டப்பிங்கில் எல்லாம் என்னால் முழுதாக இருக்க முடியவில்லை. நம் வார்த்தையை நம்பி பணம் போடுபவர்களுக்கு நாம் திருப்பி எடுத்துக் கொடுக்க வேண்டும். அதை நாம் கவனமாக கையாண்டு வந்தேன். தாணு சார் இந்தப்படத்திற்கு கிடைத்தது தான் இவ்வளவு பெரிய இடத்திற்கு போனதற்கு காரணம்.” என்றார்.

 

அமெரிக்காவில் இருப்பதால் இவ்விழாவில் கலந்துகொள்ள முடியாத தனுஷ், தொலைபேசி மூலம் பேசுகையில், “ரொம்பச் சந்தோசமா இருக்கு. என்ன சொல்றதுன்னே தெரியல. ரொம்ப சந்தோசமா இருக்கு. எனக்கு மீடியா தொடர்ந்து கொடுக்குற சப்போர்ட்டுக்கு நன்றி. அசுரன் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். இரட்டிப்பு மகிழ்ச்சியா இருக்கு. தாணு சார் வெற்றிமாறனுக்கு ரொம்ப நன்றி.” என்றார்.