ஆரிக்கு ஜோடியான ‘பிக் பாஸ்’ ஐஸ்வர்யா தத்தா!

பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த ஐஸ்வர்யா தத்தாவும், ஆரியும் ஜோடி சேரும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சென்னை முகப்பேரில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளது. மேலும், இரண்டு பாடல்களுக்காக வெளிநாட்டுக்கும் படக்குழுவினர் செல்ல இருக்கிறார்கள்.
60 களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது, 80 களில் ஜாதி தடையாக இருந்தது, 2000 ஆம் ஆண்டில் அந்தஸ்து தடையாக இருந்தது. இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது, என்பதை பிரதிபலிக்கும் விதமாக எல்ல தரப்பினரையும் கவரும் கதை களம் தான் இப்படம். கடந்து போன காதலையும், இன்று நடந்து கொண்டிருக்கும் காதலையும் காட்டும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இப்படத்தில், ரசிகர்கள் தங்கள் காதலை கூட பார்க்கும் விதத்தில் படம் உருவாக உள்ளது.
கவிதை நயம் கொண்ட காதல் படமாக உருவாக உள்ள இப்படத்தை ‘அய்யனார்’ படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்குகிறார். ஏ.ஜி.மகேஷ் இசையமைக்க, தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஈ.ஆர்.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் பி.தர்மராஜ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம், படத்தின் தலைப்பு ஆகியவை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.