’ட்ரீம் கேர்ள்’ (Dream Girl) திரைப்பட விமர்சனம்
Casting : Jeeva, Harishmitha, Prabhu Sastha, Thuruvan, Indira
Directed By : MR Bharathi
Music By : Ilamaran
Produced By : Charulatha Films
நாயகன் ஜீவா திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு வாழ்கிறார். நாயகி ஹரிஷ்மிதா திரைப்பட பின்னணி பாடகியாக வேண்டும் என்ற கனவோடு வாழ்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. காதல் ஜோடியாக வாழ்க்கையை ரசித்துக் கொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கையில் ஒரு கனவு வருகிறது. அந்த கனவு இருவரது வாழ்விலும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை மசாலா கலப்பில்லாத காதல் கதையாக சொல்வதே ‘ட்ரீம் கேர்ள்’.
தமிழ் சினிமாவில் முக்கோணக் காதல் கதைகள் பல வெளியாகி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பின்னணியில், சில புதுமையான அம்சங்களை கொண்டவை. அந்த வகையில், இந்த படத்தில் கனவு வில்லனாக சித்தரிக்கப்பட்டு, அதை மையப்புள்ளியாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை படத்திற்கு தனி சிறப்பு சேர்த்திருக்கிறது.
நாயகனாக நடித்திருக்கும் ஜீவா மற்றும் நாயகியாக நடித்திருக்கும் ஹரிஷ்மிதா இருவரும் புதியவர்கள். முதல் படத்திலேயே முழு படத்தையும் தங்களது தோளில் சுமந்து செல்லும் வாய்ப்பை பெற்று, அதை மிக சரியாக செய்திருக்கிறார்கள்.
பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் தங்களது வேலையை சரியாக செய்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இளமாறன் இசையில் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் கேட்பதற்கு இனிமை. பின்னணி இசை கதைக்களத்திற்கு ஏற்ப, எந்தவித இரைச்சல் இன்றி இனிமையாகவும், அமைதியாகவும் பயணிக்கிறது.
ஒளிப்பதிவாளர் சாலமன் போவாஸ் கட்டிடங்கள் அற்ற ஊட்டியை காட்டி கண்களுக்கு இயற்கை விருந்தளித்திருக்கிறார்.
அழுத்தமான காதல் கதையாக இருந்தாலும், படம் பார்ப்பவர்களின் இறுக்கத்தை போக்கும் வகையில் படத்தொகுப்பாளர் ஸ்.பி.அஹமத் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
ஹேமந்த் செல்வராஜ், ராம் சரசுராம், எம். டி .தமிழரசன் ஆகியோரது வசனத்தில் காதல் ரசம் மிக குறைவாக இருக்கிறது.
எம்.டி. தமிழரசன், கிருத்திகா தாஸ் ஆகியோரது திரைக்கதை முக்கோணக் காதல் கதையை வேறு ஒரு பரிணாமத்தில் கொடுக்க முயற்சித்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது.
கதை எழுதி இயக்கியிருக்கும் எம்.ஆர்.பாரதி, கனவை துரத்தும் காதல் ஜோடிக்குள் ஒரு கனவு, அந்த கனவு ஏற்படுத்தும் காதல் மாயாஜாலம், என்ற ஒருவரிக் கதையை வைத்துக்கொண்டு, அழகான மற்றும் அழுத்தமான காதல் படைப்பை படைத்திருக்கிறார்.
ஊட்டியை கதைக்களமாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் படம் பார்ப்பவர்களையும் அந்த இடங்களில் பயணிக்க வைப்பது போல் இருப்பதோடு, காதலர்கள் மட்டுமே பயணிக்கும் பகுதிகளும் படத்தின் ஒரு கதாபத்திரமாக கவனம் ஈர்க்கிறது.
முக்கோணக் காதல் கதைகள் ஏராளம் என்றாலும், அதில் ஒரு வித்தியாசத்தை புகுத்தி, அதீத மசாலத்தனம் இன்றி சொல்லியிருக்கும் இயக்குநர் எம்.ஆர்.பாரதி, தற்போதைய நவீன காலக்கட்டத்திற்கு ஏற்ப சொல்வதில் சற்று தடுமாறியிருக்கிறார். அந்த தடுமாற்றத்தை சரி செய்திருந்தால் இந்த காதல் படம் நிச்சயம் காவியம் படைத்திருக்கும்.
மொத்தத்தில், ‘ட்ரீம் கேர்ள்’ காதல் உணர்வு.
ரேட்டிங் 3/5

