Oct 27, 2020 10:34 AM

’அன்பே வா’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகும் வெள்ளித்திரை நாயகி

’அன்பே வா’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகும் வெள்ளித்திரை நாயகி

திரைப்படங்களுக்கு நிகராக தொலைக்காட்சி தொடர்களும், அதில் நடிப்பவர்களும் மக்களிடம் பிரபலமடைவதால், பல முன்னணி சினிமா நடிகர், நடிகைகள் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், ‘குரங்கு பொம்மை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான டெல்னா டேவிஸ், ‘அன்பே வா’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிறார்.

 

நித்திலன் இயக்கத்தில், பாரதிராஜா, வித்தார்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘குரங்கு பொம்மை’ படத்தில் கதாநாயகியாக நடித்த டெல்னா டேவிஸ், அப்படத்தை தொடர்ந்து ’ஆக்கம்’, ’49 ஓ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

 

இந்த நிலையில், குடும்பப் பின்னணியில் அழகான காதலை மையமாக வைத்து உருவாகி வரும் ‘அன்பே வா’ தொடர் மூலம் சின்னத்திரையிலும் நாயகியாக அறிமுகமாகியுள்ளார் டெல்னா டேவிஸ். 

 

டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக விராட் நடிக்கிறார். இவர்களுடன் வினயா பிரசாத், ஆனந்த், கன்யா, ரேஷ்மா, கெளசல்யா செந்தாமரை, பிர்லா போஸ், துரை ஆகியோர் நடித்துள்ளனர்.

 

வரும் நவம்பர் 2 ஆம் தேதி முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘அன்பே வா’ தொடரை சரிகமா இந்தியா லிட் சார்பில் விஜயலட்சுமி தயாரிக்கிறார். இமானுவேல் இயக்க, தரண்குமார் இசையமைத்துள்ளார்.