ஜாதி அமைப்பினரின் மிரட்டல்! - அச்சத்தில் ‘தொட்ரா’ இயக்குநர்

பிருத்விராஜன், மலையாள நடிகை வீணா நடிப்பில் உருவாகியுள்ள ‘தொட்ரா’ ஆணவக்கொலையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதை, அப்படத்தின் இயக்குநர் மதுராஜ், ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கும் நிலையில், படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் படத்தை வெகுவாக பாராட்டி யு சான்றிதழ் வழங்கிவிட்டார்கள்.
இதையடுத்து படத்தின் ரிலீஸ் பணிகளில் தீவிரம் காட்டிய படக்குழுவினர் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய தேதி குறித்து, அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்து விட்டார்கள். ஏற்கனவே வெளியான படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் படம் குறித்து பிரபலங்கள் பலர் பேசியது என்று ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை படம் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், ஜாதி அமைப்பு ஒன்று இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, இது தொடர்பாக இயக்குநரை மிரட்டியும் வரும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
படத்தின் கதை எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை கதாபாத்திரங்களாக வைத்து எடுத்திருக்கிறீர்கள் என தெரிகிறது. அதனால், படத்தை எங்களுக்கு போட்டுக்கட்ட வேண்டும், இல்லாவிட்டால் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம், என திருவல்லிக்கேணியில் ரூம் போட்டு உட்கார்ந்து இயக்குநர் மதுராஜை சில ஜாதி அமைப்பு ஆட்கள் மிரட்டி வருகிறார்களாம்.
படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இப்படி புது சிக்கல் உருவாகிவிட்டதே, என்ன செய்வது, இவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம், என்ற அச்சத்தில் இயக்குநர் மதுராஜ் தனது செல்போனை ஆப் செய்துவிட்டு அமைதியாகிவிட்டாராம்.
ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஹீரோயினின் அண்ணனாக படத்தின் முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் ஜெய்சந்திராவின் கணவர் எம்.எஸ்.குமார் அறிமுகமாகியிருக்கிறார். இவருடன் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
உத்தமராசா இசையமைத்திருக்கும் இப்பட்த்திற்கு வி.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ராஜேஷ் கண்ணன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.