May 11, 2020 07:22 AM

”ஒரே இடத்தில் 6 மணி நேரம்...” - திவ்யாவின் கசப்பான சினிமா அனுபவம்

”ஒரே இடத்தில் 6 மணி நேரம்...” - திவ்யாவின் கசப்பான சினிமா அனுபவம்

ஃபேஸ்புக் வட்டாரத்தில் திவ்யா துரைசாமி என்றால் தெரியாத நபர்களே இருக்க மாட்டார்கள், அந்த அளவுக்கு அத்தளத்தில் பேமஸான முகமாக திகழும் திவ்யா, அவ்வபோது தனது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். சென்னையை சேர்ந்த தமிழ் பெண்ணான இவர், தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக தனது ஊடக பணியை தொடங்கி பிறகு நடிகையானார்.

 

பல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய திவ்யா துரைசாமிக்கு, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் சிறு வேடம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடக்க, அதை சரியாக பயன்படுத்தியவர், அப்படத்திற்கு பிறகு தனது முழு கவனத்தையும் சினிமா பக்கம் திருப்பியுள்ளார். அதற்காக தனது செய்தி வாசிப்பாளர் பணியை ராஜினாமா செய்துவிட்டு, சினிமா வாய்ப்பு தேடும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.

 

அப்படி சினிமா வாய்ப்பு தேடும் போது திவ்யா துரைசாமி பல கசப்பான சம்பவங்களை எதிர்கொண்டிருக்கிறார். அது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய திவ்யா துரைசாமி, “செய்தி வாசிப்பாளராக அடுத்தடுத்த சேனல்களில் சுலபமாக வேலை கிடைத்தது. ஆனால், சினிமா அப்படி அல்ல. இங்கு ஒரு வாய்ப்பை பெறுவதற்காக அதிகமாக சிரமப்பட வேண்டி இருக்கிறது. ஒரு இயக்குநரை சந்திப்பதற்காக ஒரே இரத்தில் 6 மணி நேரம் காத்துக் கொண்டிருந்தேன். அப்படி இருந்தும் அந்த இயக்குநரை என்னால் சந்திக்க முடியவில்லை.

 

Divya Duraisamy

 

எனவே, சினிமாவில் பொறுமையும், காத்திருப்பும் முக்கியம். அதை நன்கு உணர்ந்த நான் சினிமாவில் எப்படியும் கதாநாயகியாக வெற்றி பெற வேண்டும், என்று முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு வேலையில் நான் இறங்கிவிட்டால் அதை பாதியில் விட மாட்டேன், அப்படி தான் சினிமாவிலும்.” என்று தெரிவித்திருக்கிறார்.

 

மேலும், இயக்குநர் பாலஜி சக்திவேல் இயக்கும் புதிய படம் ஒன்றில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் திவ்யா துரைசாமி நடித்திருக்கிறாராம். அந்த வேடத்தில் அவர் நடித்து முடித்த பிறகு அவரை பாராட்டிய இயக்குநர் பாலாஜி சக்திவேல், “கல்லூரி படத்தில் தமன்னா நடிக்கும் போது, அவர் பெரிய ஆளாக வருவார், என்று எனக்கு தோன்றியது. இப்போது உன்னை பார்க்கும் போதும் அதுபோல தான் தோன்றுகிறது. எனவே நீ நிச்சயம் பெரிய ஆளாக வருவ.” என்றும் வாழ்த்தினாராம்.

 

Divya Duraisamy

 

பாலுமகேந்திரா திரைப்பள்ளியில் பயின்ற ஒருவர் இயக்கும் படத்தில் திவ்யா துரைசாமி கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறாராம். ஊரடங்கினால் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குவதில் தாமதாம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு இப்படத்தில் அறிவிப்பு வெளியாவதோடு, படப்பிடிப்பும் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.