Aug 30, 2018 08:09 PM

தமிழ் கலாச்சாரத்தோடு நடைபெற்ற ‘ஏகாந்தம்’ இசை வெளியீட்டு விழா!

தமிழ் கலாச்சாரத்தோடு நடைபெற்ற ‘ஏகாந்தம்’ இசை வெளியீட்டு விழா!

அன்னை தமிழ் சினிமாஸ் நிறுவனம் சார்பில் ஆர்செல் ஆறுமுகம் தயாரித்து இயக்கும் படம் ‘ஏகாந்தம்’. விவாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக நீரஜா நடிக்கிறார். இவர்களுடன் அனுபமா குமார், கை தென்னவன், இயக்குநர் கெளதம் கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

காதலையும், தமிழ் கலாச்சாரத்தையும் மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் கிராமம் குறித்தும் விவசாயம் குறித்தும் பேசப்பட்டிருக்கிறது.

 

எஸ்.கா.பூபதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.பி.அஹமத் எடிட்டிங் செய்கிறார். ராதிகா நடனம் அமைக்க, கே.வி.லோகு கலையை நிர்மாணிக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, ஏக்நாத், டி.ஜே.குமார் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

 

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் கே.ராஜன், கதிரேசன், டி.சிவா, கஸாலி, இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், இயக்குநர் கே.பாக்யராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

வித்தியாசமான முறையில், கரகாட்டம், ஒயிலாட்டம், குதிரையாட்டம் என்று தமிழ் கலைகளைக் கொண்டு நடத்தப்பட்ட ‘ஏகாந்தம்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வந்திருந்த விருந்தினர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மேலும், திரையிடப்பட்ட படத்தின் பாடல்களும், டிரைலரும் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.

 

Eghantham

 

நிகழ்ச்சியில் பேசிய கே.ராஜன், “தற்போதைய காலக்கட்டத்தில் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமான படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம், என்று சிலர் மோஷமான படங்களை தயாரித்து வருகிறார்கள். அந்த வரிசையில் வெளியான சில படங்களை தயாரித்தவர்கள் அழிந்துவிடுவார்கள். அதே சமயம், ஏகாந்தம் போன்ற தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கும் விதமான படங்களை தயாரிப்பவர்கள் நிச்சயம் சிறப்பாக வாழ்வார்கள். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை பார்க்கும் போது படம் குடும்பத்தோடு பார்க்ககூடிய படமாக இருக்கும் என்பது தெரிகிறது. குடும்பத்தோடு பார்க்க கூடிய படங்கள் அனைத்தும் வெற்றி பெறும், அந்த வகையில் இந்த ஏகாந்தம் படமும் நிச்சயம் வெற்றி பெறும்/” என்று வாழ்த்தினார்.

 

அவரை தொடர்ந்து பேசிய அனைத்து சிறப்பு விருந்தினர்களும், ஏகாந்தம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்ட முறையை பாராட்டி பேசியதோடு, படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரையும் வெகுவாக பாராட்டினார்கள். அதேபோல், படம் நிச்சயம் வெற்றி பெறும், என்று நம்பிக்கையும் தெரிவித்தார்கள்.

 

முன்னதாக பேசிய ஏகாந்தம் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்செல் ஆறுமுகம், “நான் பாரதிராஜா சாரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவன். அவர் படத்தை பார்த்து தான் நான் இயக்குநராக வேண்டும் என்று ஊரில் இருந்து வந்தேன். சென்னைக்கு வந்த சில நாட்களிலேயே அவரை நேரில் பார்த்தாலும் அவருடன் சேர்ந்து பணியாற்ற முடியவில்லை. ஆனால், தமிழ்த்திரை தொலைக்காட்சிக்காக இரண்டு வருடங்கள் பாரதிராஜா சாருடன் நெருங்கி பழகினேன். இந்த நிகழ்ச்சிக்கு அவர் வரவேண்டியதாக தான் இருந்தது. ஆனால், அவரது படத்தின் ஷூட்டிங் இருப்பதால் அவரால் வர முடியவில்லை. இருந்தாலும், இந்த படத்திற்காக எதுவேண்டுமானாலும் செய்கிறேன், என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்.

 

பாரதிராஜா சார் வரவில்லை என்றாலும், அவரது சிஷ்யரான பாக்யராஜ் சார் இங்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. அவர் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான், நிச்சயம் அவரது படங்களைப் போல நேர்மையான படங்களையே இயக்குவேன். அந்த வரிசையில் ஏகாந்தம் நிச்சயம் இருக்கும்.” என்றார்.

 

தஞ்சாவூர் ஜென் டிவி சு.ஆறுமுகம், பாலராஜ் ஆண்டனி, டி.இ.ஜெயசீலன், சு.மூர்த்தி, வி.எஸ்.அரசும்,அணி, ஜென் டிவி ஆர்.மகேந்திரன், ஜோதி அத்தான் ஆகிய் ஏழு நண்பர்களுடன் அன்னை தமிழ் சினிமாஸ் நிறுவனம் மூலம் ஆர்செல் ஆறுமுகம் தயாரித்திருக்கும் ‘ஏகாந்தம்’ படத்தை கியூ சினிமாஸ் மூலம் அசோக் ரங்கநாதன் வெளியிடுகிறார்.