May 13, 2018 09:47 AM

’இரும்புத்திரை’ பாணியில் பணத்தை இழந்த பிரபல நடிகர்!

’இரும்புத்திரை’ பாணியில் பணத்தை இழந்த பிரபல நடிகர்!

அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், நடித்து தயாரித்துள்ள படம் ‘இரும்புத்திரை’. சமந்தா ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

டிஜிட்டல் இந்தியாவின் மறுபக்கத்தை காட்டியிருக்கும் இப்படம் ஸ்மார்ட்போன்களை விபரம் இல்லாமல் பயன்படுத்துவதாலும், டிஜிட்டல் உலகில் நடைபெறும் மோசடிகள் குறித்தும் ரொம்ப டீட்டய்லாக பேசியிருப்பதோடு, சாமாணிய மக்களும் அதனை புரிந்துக்கொள்ளும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதால், அனைத்து தரப்பிலும் படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றுள்ளது.

 

இந்த நிலையில், ‘இரும்புத்திரை’ படத்தில் பிறரது வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கு தெரியாமல் பணம் பறிபோவது போல, பிரபல நடிகரான ரமணாவும், தனது வங்கியில் இருந்து பணத்தை இழந்துள்ளது தெரிய வந்துள்ளது.

 

Ramana

 

சமீபத்தில் ‘இரும்புத்திரை’ படத்தின் சிறப்பு காட்சி பிரபலங்களுக்காக திரையிடப்பட்டது. இதில் பங்கேற்று படத்தைப் பார்த்த நடிகர் ரமணா, படம் முடிந்து வெளியே வந்ததும், படம் குறித்து பேசியவர், “தற்போதைய சூழலில் ரொம்ப தேவையான, மிக முக்கியமான படமாக ‘இரும்புத்திரை’ இருக்கிறது. இதேபோல தான் கடந்த வாரம் எனது அக்கவுண்டில் இருந்து ரூ.7500 பறிபோனது, அதை யார் எடுத்தார்கள் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நான் மட்டும் அல்ல, இங்கு படம் பார்க்க வந்த பலர், தங்களது வாழ்க்கையிலும் இப்படி நடந்துள்ளது என்று பேசிக்கொள்கிறார்கள்.” என்றார்.