May 08, 2020 02:32 PM

சினிமா பணிகளுக்கு அனுமதி! - அரசுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர்கள்

சினிமா பணிகளுக்கு அனுமதி! - அரசுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர்கள்

கொரோனா பாதிப்பால் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமா தொழிலாளர்கள் முதல் முதலாளிகளான திரைப்பட தயாரிப்பாளர்கள் வரை அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிப்படைந்திருப்பதால், சில துறைகள் இயங்க அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது போல், சினிமா துறையின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும், என்று பெப்ஸி அமைப்பும், திரைப்பட தயாரிப்பாளர்களும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்தனர்.

 

தயாரிப்பாளர்களின் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு, சினிமாத் துறையின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளான, எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட பணிகளை செய்வதற்கு இன்று அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, வரும் மே 11 ஆம் தேதி முதல் திரைப்படங்களின் எடிட்டிங், டப்பிங், ஒலி சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு உள்ளிட்ட பின்னணி வேலைகள் தொடங்க உள்ளது.

 

இதன் மூலம், படப்பிடிப்பு நிறைவடைந்த திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராகும். அதேபோல், இப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

 

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று, போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.