Aug 29, 2018 07:27 PM

‘இரும்புத்திரை’ 100 வது நாள் விழா - மேடையில் கேடயம் வாங்காத விஷால்

‘இரும்புத்திரை’ 100 வது நாள் விழா - மேடையில் கேடயம் வாங்காத விஷால்

அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து தயாரித்த ‘இரும்புத்திரை’ படம் 100 நாட்களை கடந்திருக்கிறது. இதனை கொண்டாடும் விதத்தில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் பிரம்மாண்ட விழாவுக்கு விஷால் ஏற்பாடு செய்திருந்தார்.

 

இதில், படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன், நாயகி சமந்தா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட ஒட்டு மொத்த படக்குழுவினரும் கலந்துக்கொண்டதோடு, தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்கள்.

 

பொதுவாக விஷால் தனது நிகழ்ச்சியில் விருந்தினர்களுக்கு பூங்கொத்து கொடுப்பதற்கு ஆகும் தொகையை ஏழை பெண்களின் கல்விக்கு கொடுப்பார். அதுபோல இன்றும் கீர்த்தனா, ஐஸ்வர்யா என்ற இரு பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவி தொகை வழங்கினார்.

 

மேலும், இரும்புத்திரை படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகைகள் என அனைவருக்கும் 100 வது நாள் கேடயம் வழங்கப்பட்டது. ஆனால், விஷாலுக்கு மட்டும் மேடையில் கேடயம் வழங்கப்படவில்லை. காரணம், கனடா நாட்டில் இருந்து வந்த அக்‌ஷயா என்ற பெண்ணிடம் தான் கேடயத்தை பெற வேண்டும் என்று விஷால் விரும்பினார்.

 

பிறந்தது முதல் கண் பார்வையற்ற அந்த பெண், விஷாலுடைய 24 படங்களையும் காதால் கேட்டே வளர்ந்துள்ளார். விஷாலின் எந்த பட வசனத்தை கூறினாலும், அது எந்த படம் என்று சரியாகச் சொல்லிவிடுகிறார். ஆகையால், அவர் கையால் கேடயம் பெறுவதே தனக்கு மிகச் சிறந்த பரிசாக கருதுவதாக விஷால் கூறினார். அந்தப் பெண் நேற்ரே விஷாலின் இல்லத்திற்கு வந்து விஷாலிடம் கேடயத்தை வழங்கிவிட்டதால், இன்று விஷால் மேடையில் கேடயம் வாங்கவில்லை. 

 

Vishal Irumbuthirai 100th day celebration

 

நிகழ்ச்சியில் பேசிய விஷால், “சில படங்கள் வெற்றியடைந்தாலும் சில படங்கள் தான் திருப்புமுனையாக அமையும், அப்படிதான் இரும்புதிரையும். இப்படத்தின் கதையைக் கேட்கும்போதே முடிவு செய்து விட்டேன், கண்டிப்பாக என் சினிமா வாழ்வில் முக்கியமான படமாக இருக்கும் என்று. யுவன் என்னுடன் பிறந்த சகோதரன் மாதிரி.

 

நான் முதலில் அர்ஜுனிடம் தான் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். என்னுடைய முதல் சம்பளம் 1௦௦ ரூபாய். சிறிது சிறிதாக சேர்த்து என் அம்மாவிற்கு ஒரு புடவையும், அப்பாவுக்கு ஷேவிங் கிட்டும் வாங்கிக் கொடுத்தேன். இப்படம் மாபெரும் வெற்றியடைந்ததற்கு முக்கியக் காரணம் அர்ஜுன் தான்.

 

சினிமாத் துறையில் கதாநாயகிக்கு திருமணமாகிவிட்டால் அதோடு, நடிக்க வரமாட்டார்கள். அப்படியே வந்தாலும் அக்கா கதாபாத்திரம், அம்மா கதாபாத்திரத்தில் தான் நடிப்பார்கள் என்ற நம்பிக்கையை உடைத்து, கதாநாயகியாக நடித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் சமந்தா.” என்று தெரிவித்தார்.