Oct 11, 2021 06:05 AM

ஜீவா - சிவா இணைந்து நடிக்கும் ‘கோல்மால்’! - பிரம்மாண்டமாக நடந்த படத்துவக்க விழா

ஜீவா - சிவா இணைந்து நடிக்கும் ‘கோல்மால்’! - பிரம்மாண்டமாக நடந்த படத்துவக்க விழா

ஜீவாவும், சிவாவும் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘கோல்மால்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கே.பாக்யராஜ் மற்றும் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, கன்னடத்தில் பல வெற்றிப் படங்களை இயக்கிய பொன்குமரன் இயக்கும் இப்படத்தை ஜாகுவார் ஸ்டுடியோஸ் சார்பில் வினோத் ஜெயின் தயாரிக்கிறார்.

 

கலகலப்பான குடும்பத் திரைப்படமாக உருவாக உள்ள இப்படத்தில் நாயகிகளாக பாயல் ராஜ்புத், தான்யா ஹோப் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முரளி சர்மா, யோகி பாபு, சோனியா அகர்வால், மனோபாலா, கருணாகரன், ரமேஷ் கண்ணா, நரேன், ஜார்ஜ் மரியான், சஞ்சனா சிங், மொட்டை ராஜேந்திரன், பஞ்சு சுப்பு, சாது கோகிலா, விபின் சித்தார்த், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

முழுக்க முழுக்க மொரிசியஸ் நாட்டில் படமாக்கப்பட உள்ள இப்படத்தின் துவக்க விழா நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பூஜையுடன் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

படம் குறித்து பேசிய இயக்குநர் பொன்குமரன், ”ஜீவாவும் சிவாவும் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். அவர்கள் கூட்டணி அமைக்கும் பொழுது அது இன்னும் சிறப்பாக இருக்கும். முழுநீள நகைச்சுவையுடன் கூடிய குடும்ப பொழுதுபோக்கு படமாக கோல்மால் இருக்கும், இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும், ரசிகர்களை அவர்களது குடும்பத்துடன் திரையரங்கிற்கு வரவழைக்கும்.” என்றார்.

 

அருள்தேவ் இசையமைக்கும் இப்படத்திற்கு எஸ்.சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். டான் போஸ்கோ படத்தொகுப்பு செய்ய, சிவா கலை இயக்கத்தை கவனிக்கிறார். மதன் கார்கி மற்றும் விவேகா பாடல்கள் எழுதுகின்றனர்.

 

எம்.நரேஷ் ஜெயின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றும் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பை எம்.செந்தில் கவனிக்கிறார். மக்கள் தொடர்பாளராக நிகில் முருகன் பணியாற்றுகிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ள படக்குழுவினர், 2022 ஆம் ஆண்டு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.