Aug 28, 2018 06:18 PM

5 லட்சம் பார்வையாளர்களை கடந்த ‘ஜானி’! - மகிழ்ச்சியில் பிரஷாந்த்

5 லட்சம் பார்வையாளர்களை கடந்த ‘ஜானி’! - மகிழ்ச்சியில் பிரஷாந்த்

ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் நடிகர் தியாகராஜன் தயாரிப்பில் பிரஷாந்த் நடிக்கும் படம் ‘ஜானி’. சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை வெற்றிசெல்வன் இயக்குகிறார். 

 

பிரஷாந்துக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கும் இப்படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பாலிவுட் நடிகர் அஷுடோஷ் ராணா வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் ஷாயஜி ஷிண்டே, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, சோனா, கலைராணி என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கிறார்கள்.

 

இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இயக்குநர் மணிரத்னம் டீசரை வெளியிட்டு பிரஷாந்த் உள்ளிட்ட படக்குழுவினரை வாழ்த்தினார்.

 

பிறகு ‘ஜானி’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். பிரஷாந்த் கோல்டு டவரில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரஷாந்த், தயாரிப்பாளர் தியாகராஜன், நாயகி சஞ்சிதா ஷெட்டி, ஆனந்தராஜ், ஒளிப்பதிவாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

 

Johnny Press Meet

 

நிகழ்ச்சியில் பேசிய தியாகராஜன், “பிரஷாந்துக்கு ஏற்ற கதையாக ‘ஜானி’ இருக்கும். சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் திரில்லர் படமான இதில் பாடல்கள் இல்லை. படம் முழுவதும் ரசிகர்கள் சீட் நுணியில் அமர்ந்து பார்க்கும்படி விறுவிறுப்பாக இருக்கும். படம் சற்று காலதாமதமானதற்கு சினிமா துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றமே காரணம். சென்சார் வாங்கிய படங்களுக்கு ரிலீஸ் செய்வதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. அதனால் தான் ஜானி படம் வெளியீட்டில் சிறிது காலதாமதம் ஆகிறது. சென்சார் வாங்கியதும் தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி பெற்று படத்தை ரிலீஸ் செய்வோம்.” என்றார்.

 

நடிகர் பிரஷாந்த் பேசும் போது, “ஜானி படம் அனைத்து தரப்பினருக்குமான படமாக இருக்கும். குறிப்பாக இளைஞர்களை கவரக்கூடிய பல விஷயங்கள் படத்தில் இருக்கிறது. தற்போது டீசர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. அதுபோல் படமும் நிச்சயம் வரவேற்பு பெறும்.” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 

‘ஜானி’ படத்தின் டீசர் வெளியாகி ஒரே நாளில் 5 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.