Sep 11, 2018 03:23 PM

ஜோதிகாவின் அடுத்தப் படம்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜோதிகாவின் அடுத்தப் படம்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக, பீக்கில் இருந்த போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டவர் ஜோதிகா. பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், குழந்தைகள் வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது குழந்தைகள் வளர்ந்துவிட்ட நிலையில், மீண்டும் நடிக்க வந்திருக்கும் அவர், முன்பை போலவே தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

 

‘36 வயதினிலே’ படம் மூலம் ரீஎண்ட்ரியான ஜோதிகா, அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’ என ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து, தொடர் வெற்றியையும் கொடுத்து வருகிறார்.

 

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்திருப்பவர், ராதா மோகன் இயக்கத்தில் ‘காற்றின் மொழி’ திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ள நிலையில், ஜோதிகாவின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

 

அறிமுக இயக்குநர் ராஜ் என்பவர் இயக்கத்தில் ஜோதிகா அடுத்ததாக நடிக்க இருக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை, ‘ஜோக்கரி’, ‘அருவி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களையும், தரமான படங்களையும் தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் பிற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.

 

படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பிற தகவல்களை தயாரிப்பு தரப்பு விரைவில் வெளியிட உள்ளது.