Jan 19, 2021 10:07 AM

சிபிக்கு ‘கபடதாரி’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் - பிரபலங்கள் வாழ்த்து

சிபிக்கு ‘கபடதாரி’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் - பிரபலங்கள் வாழ்த்து

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே.கிங் இசையமைக்க, பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். அருண்பாரதி, கு.கார்த்திக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

 

வரும் ஜனவரி 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கடபதாரி’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றதோடு, ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, திரையுலகினரிடையே பெரிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

‘கபடதாரி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா, நடிகர் விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் டி.சிவா, “சினிமா தொழில் என்னாகுமோ, ஏதாகுமோ என்று பயந்துக் கொண்டிருந்த நிலையில், அத்தனை பேருடைய பயத்தையும் மாஸ்டர் திரைப்படம் போக்கியுள்ளது. மற்ற ஹீரோக்கள் பயந்துக் கொண்டிருந்த நேரத்தில் தைரியமாக களம் இறங்கிய விஜய், விஜய் சேதுபதி மற்றும் தயாரிப்பாளர் லலித்குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் மட்டும் இன்றி உலகம் முழுவதும் சினிமா துறைக்கு மீண்டும் புதிய புத்துணர்ச்சியை மாஸ்டர் கொடுத்திருக்கிறது. அந்த புத்துணர்ச்சியை தொடரச் செய்யும் ஒரு படமாக தான் ‘கபடதாரி’ படமும் உள்ளது. மிக நேர்த்தியான திரைப்படமாக உருவாகியுள்ளது. நிச்சயம் இந்த படம் பெரிய வெற்றி பெறும். அதற்கு தனஞ்செயன் சாரின் பேஷன் மற்றும் உழைப்பும் ஒரு காரணம். பணம் சம்பாதிக்க அவருக்கு பல தொழில்கள் தெரிந்தாலும், சினிமா மீது உள்ள பேஷனால் இங்கு தொடர்ந்து பயணிக்கிறார். பல ரிஸ்க்குகளை எடுக்கிறார். தைரியமானவர்கள் என்றுமே தோற்பதில்லை. அந்த வகையில், ‘கபடதாரி’ திரைப்படம் தனஞ்செயன் சாருக்கும், நடிகர் சிபிக்கும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும்.” என்றார்.

 

Kabadadaari Audio Launch

 

நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், “தனஞ்செயன் சாரை எறும்பு போல சுறுசுறுப்பானவர் என்று சொன்னார்கள். பத்து எறும்பின் சுறுசுறுப்பு அவரிடம் உள்ளது. எல்லா பணிகளையும் ஈடுபாட்டுடன் செய்வார். தமிழ் சினிமாவுக்கு மிகவும் அவசியமான தயாரிப்பாளர். படத்தின் நாயகன் சிபியும் ரொம்ப இனிமையான மனிதர். மிகப்பெரிய் நட்சத்திரன் மகன் என்ற அடையாளமே இல்லாமல் இருப்பார். நான் இசையமைப்பாளராக இருக்கும் போதே அவர் என்னிடம் ரொம்ப இயல்பாக பழகுவார். இவர்களுடைய பட விழாவுக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இசையமைப்பாளர் சைமன் ரொம்ப நெருக்கமானவர், திறமையானவர். அவருக்கான உயரம் இன்னும் இருக்கிறது. தெலுங்கிலும் அவர் அறிமுகமாக இருக்கிறார், அதற்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய முதல் படத்தின் கலை இயக்குநர் நிதேஷ், இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார், அவருக்கும் வாழ்த்துகள். எடிட்டர் பிரவீன் சாரின் பணி சிறப்பாக இருக்கும். அவருடைய கட்டிங்ஸை பார்த்து நான் ரசிப்பேன். அவர் இந்த படத்தில் பணியாற்றியிருப்பது மகிழ்ச்சி. படத்தின் இரண்டாவது ஹீரொ ஜே.எஸ்.கே சார். அவரை ரொம்ப ரசிப்பேன். அக்னி சிறகுகள் படம் மூலம் அவருடன் நெருங்கி பழகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப சிறந்த மனிதர். ரொம்ப இயல்பாக நடிக்க கூடியவர் ஜெயப்பிரகாஷ் சார். அவரை நான் எப்போதும் ஆச்சரியமாகவே பார்ப்பேன். ஒரு தயாரிப்பாளர் எப்படி இப்படி நடிக்கிறார் என்று வியந்து பார்த்ததுண்டு. படக்குழு அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

 

இந்த படம் மிக சிறப்பாக வந்துள்ளது. மாஸ்டர் போன்ற பெரிய படங்கள் வெற்றி பெற்றது போல, இந்த படமும் வெற்றி பெற வேண்டும். அதற்கு விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும். மற்ற நேரங்களில் பரவாயில்லை. ஆனால், இப்படி ஒரு கஷ்ட்டமான காலக்கட்டத்தில் பெரிதாக விமர்சிக்காமல் இருப்பது நல்லது. மக்கள் தியேட்டருக்கு வரவேண்டும், பெரிய படங்கள் போல சிறிய படங்களும் வெற்றி பெற வேண்டும். இந்த படம் ஏற்கனவே வெற்றி பெற்ற படம் தான். நிச்சயம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

 

படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “கபடதாரி ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகியிருக்க வேண்டிய படம். கொரோனா பிரச்சினையால் இவ்வளவு மாதங்கள் காலதாமதமாகிவிட்டது. இருப்பினும் திரையரங்குகளில் தான் படத்தை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். காரணம், திரையரங்கில் பார்க்க வேண்டிய படம் இது. படம் தொடங்குவதும், முடிவதும் தெரியாத வகையில், படு வேகமாக இருக்கும். அதே சமயம், படம் முழுவதும் பல திருப்புமுனைகளும், கேள்விகளும் இருக்கும். அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்ப்பார்ப்போடு முழுப்படமும் நகரும். நிச்சயம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கபடதாரி திருப்திப்படுத்தும்.” என்றார்.

 

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் அனைவரும் படத்தையும், படத்தின் பின்னணி இசையையும் வெகுவாக பாராட்டியதோடு, இப்படத்தின் ரிலீஸுக்குப் பிறகு இசையமைப்பாளர் சைமன் கே.கிங், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி இசையமைப்பாளராக வருவார், என்றும் வாழ்த்தினார்கள்.