‘பாட்ஷா’ படத்தை பின்னுக்கு தள்ளிய ‘கன்னி மாடம்’!
ரஜினிகாந்தின் மாபெரும் வெற்றிப் படங்களில் முக்கியமான படம் ‘பாட்ஷா’. அதுமட்டும் அல்ல, ஆட்டோ ஒட்டுநர்களுக்கான பாட்டு என்றால் அது ‘பாட்ஷா’ படத்தில் இடம்பெற்ற “நான் ஆட்டோக்காரன்...” பாடல் மட்டும் தான். ஆனால், இப்போது பாட்ஷா பாடலை பின்னுக்கு தள்ளியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் பற்றிய பாடல். இதற்கு முக்கிய காரணம், இப்படத்தை இயக்கியிருக்கும் நடிகர் போஸ் வெங்கட், நடிகராவதற்கு முன்பு ஆட்டோ ஓட்டுநராக தான் பணியாற்றிக் கொண்டிருந்தார். இதனால், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது, என்பதை இந்த பாடலின் மூலம் மிக அழுத்தமாகவும், அழகாகவும் பதிவு செய்திருக்கிறார்.
தொலைக்காட்சி தொடர் மூலம் நடிகராக அறிமுகமான போஸ் வெங்கட், சினிமாவில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து தனக்கென்று தனி இடம் பிடித்திருக்கிறார். தற்போது, இயக்குநராக அறிமுகமாகிறார்.
புதுமுகங்களை வைத்து போஸ் வெங்கட் இயக்கியிருக்கும் ‘கன்னி மாடம்’ படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் “மூனு காலு வாகனம், பார்க்காத ரூட்டு இல்ல...” என்ற ஆட்டோ ஓட்டுநர்கள் பற்றிய பாடலும் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது.
சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் ‘கன்னி மாடம்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இதில் நடிகர்கள் விஜய் சேதுபதி, பரத், ரோபோ சங்கர், இயக்குநர்கள் விக்ரமன், சமுத்திரக்கனி, மேடை பேச்சாளர் திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள், ‘கன்னி மாடம்’ படத்தின் ஆட்டோ ஓட்டுநர் பாடலை பாராட்டியதோடு, போஸ் வெங்கட் ஆட்டோ ஓட்டுநராக இருந்து, நடிகராக வெற்றி பெற்றதை போல, இயக்குநராகவும் நிச்சயம் வெற்றி பெறுவார், என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக திண்டுக்கல் லியோனி பேசுகையில், ரிக்ஷா ஓட்டுநர்களாக சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநராக ரஜினிகாந்த் நடித்ததையும், அப்பாடல் பற்றியும் தான் இதுவரை மக்கள் பேசி வருகிறார்கள். ஆனால், இனி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கான படம் மற்றும் பாடல் என்றால், ‘கன்னி மாடம்’ படம் தான் நினைவுக்கு வரும்.” என்றார்.
நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், “நடிகர் போஸ் வெங்கட் சிறப்பான ஆளுமையாளர். அவரை மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரில் பார்த்து வியந்திருக்கிறேன். அவரது முகத்தை பார்த்தாலே நம்முள் ஒரு நேர்மறைதன்மை கொண்ட நம்பிக்கை பிறக்கும். நாம் சோர்வாகும் போது, தோல்வி எண்ணங்கள் வரும்போது அவரது முகத்தை பார்த்தாலே போதும் பெரும் நம்பிக்கையை அந்த முகம் தரும். படம் கண்டிப்பாக நேர்த்தியானதாக இருக்குமென தெரிகிறது. போஸ் வெங்கட் வெகு திறமை வாய்ந்தவர். கன்னி மாடம் வெற்றிபடமாக அமைய வாழ்த்துகள்.” என்றார்.
ரூபி பிலிம்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்திருக்கும் ஹஷீர் பேசுகையில், “போஸ் வெங்கட் முதல் முறையாக கதை கூறிய போதே மிக நல்ல படமாக இப்படம் வரும் எனத் தோன்றியது. உடனடியாக படம் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். நல்ல படங்களை தருவது என்பதே எங்கள் நிறுவனத்தின் குறிக்கோள். ’கன்னி மாடம்’ தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படைப்பாக இருக்கும். இப்படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்யும் செண்பகமூர்த்தி அவர்களுக்கு நன்றி.” என்றார்.
இப்படத்திற்கு இசையமைத்த ஹரி சாய் மற்றும், ஆட்டோ பாடலை பாடிய நடிகர் ரோபோ சங்கர், பாடலுக்கு கிடைக்கும் வரவேற்பிக்காக ரசிகர்களுக்கும், வாய்ப்பு கொடுத்ததற்காக தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.
’கன்னி மாடம்’ பட ஆட்டோ பாடல் இதோ,