Mar 31, 2021 01:30 PM

”தனுஷ் சார் கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார்” - இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

”தனுஷ் சார் கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார்” - இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

’பரியேறும் பெருமாள்’ படம் மூலம் மாபெரும் வெற்றி கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜின் இரண்டாவது படமாக ‘கர்ணன்’ உருவாகியுள்ளது. தனுஷ் நடிப்பில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களும், டீசரும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருப்பதோடு, பெரிய அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில், ’கர்ணன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பத்திரிகையாளர் சந்திப்பும் இன்று சென்னையில் நடைபெற்றது. தனுஷ் வெளிநாட்டில் இருப்பதால் இந்த நிகழ்ழ்வில் கலந்துக்கொள்ளவில்லை. அவரை தவிர்த்து, படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

 

தயாரிப்பாளர் கலைப்பு எஸ்.தாணு பேசுகையில், “உளப்பூர்வமான, உணர்ச்சிபூர்வமான திரைக்காவியத்தை எடுத்துள்ளார் மாரி செல்வராஜ். நீங்கள் படம் பார்த்துவிட்டு இருக்கையை விட்டு வெளியே வராமல் சிந்திக்கும் படி படம் இருக்கும். அத்தனை வேலையும் தன் தோள்மேல் சுமந்த உழைப்பாளி இயக்குனர் மாரி செல்வராஜ். பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் இல்லையே என்ற குறையை எனக்கு மாரி செல்வராஜ் போக்கி இருக்கிறார். டைரக்டர் என்ன நினைக்கிறாரோ அதை நடித்துக் கொடுத்திருக்கிறார் தனுஷ். நட்டி நடராஜ் எங்கள் குடும்பத்துப் பிள்ளை. வெற்றிமாறன் அவர்களை எப்படி பிடித்து வைத்திருக்கிறோமோ அதேபோல் மாரிசெல்வராஜ் அவர்களையும்  பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மாரி செல்வராஜ் என்னிடம் அறிமுகப்படுத்தியது தனுஷ் தான். இந்த படத்தின் கதையை ஒரு புத்தகமாக கொடுத்துள்ளார் மாரி. அதை என் பூஜை அறையில் வைத்துள்ளேன். இந்த படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. கர்ணன் வருவான், கர்ணன் வெல்வான், வாய்மையே வெல்லும்.” என்றார்.

 

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “கர்ணனைக் கண்ட நாள் முதல் கேட்ட நாள் வரை  திரையில் தான் காண்பேன் என உறுதியாக இருக்கிறார் தாணு சார். கர்ணன் திரைப்படத்தை சுதந்திரமாக என்னை எடுக்க விட்டார்கள். பரியேறும் பெருமாள் படத்தையும் அப்படித்தான் எடுத்தேன். கர்ணன் திரைப்படத்தை கிராமத்து பகுதியில் எடுப்பதற்கான காரணம் அந்த படத்திற்கு உயிரோட்டம் கொடுக்கத்தான். இப்படி அழகான ஒரு செட் அமைத்துக் கொடுத்த ஆர்ட் டைரக்டருக்கு என் நன்றிகள். ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் எனக்கு 12 ஆண்டுகால பழக்கம். மிகவும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்தில் எனக்கென்று ஒரு தனி அமைப்பில் இசை அமைத்துள்ளார். என் ஊர் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். “இந்த படத்தில் என்னுடைய நடிப்பை மேலும் மெருகேற்றியது என்னுடன் நடித்த அந்த ஊர் மக்களும் சக கலைஞர்களும் தான்” என்று தனுஷ் சார் சொன்னார். இந்த படத்தை பார்த்து தான் சார் என்னை கட்டி அனைத்து முத்தம் கொடுத்து பாராட்டினார். படம் பார்த்து முடித்தவுடன் கண்கலங்கினார். பரியேறும் பெருமாள் படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற மீடியாவும் ஒரு காரணம். அதுபோல் கர்ணனுக்கும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.” என்றார்.

 

Karnan

 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில், “பரியேறும் பெருமாள் படம் பார்க்காமலேயே இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார் தனுஷ். இந்த விழாவில் அவர் இல்லை என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. அவரை ரொம்ப மிஸ் பண்றேன். இப்படத்தில் உழைத்த அத்தனை இசைக் கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்துக்காக கிராபி பகுதிகளுக்கு சென்று நேரடியாக இசையை ரெகார்ட் செய்துள்ளோம் .இதற்கு பின் பலபேரது உழைப்புகள் இருக்கிறது. கண்டா வரச்சொல்லுங்க, தட்டான் தட்டான் போன்ற பாடல்களுக்கு மக்கள் அளித்த ஆதரவு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. எனக்கு இந்த படத்தில் வாய்ப்பை அளித்த கலைப்புலி தாணு சார் மற்றும் மாரிசெல்வராஜ் ,தனுஷ் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

 

நடிகர் யோகிபாபு பேசுகையில், “கர்ணன் படத்தில் அனைவராலும் பேசப்படக்கூடிய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் .பரியேறும் பெருமாள் படத்திலும் இதுபோன்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மாரிசெல்வராஜ் எனக்கு வாய்ப்பு அளித்தார். தனுஷ் சார் பற்றி நான் சொல்ல வேண்டும் அவர் திரைக்கு பின்னால் வேறொரு முகம் .திரைக்கு முன்னாள் கர்ணன் ஆகவே வாழ்ந்தார் .அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நட்டி நடராஜ் பேசுகையில், “இந்த படத்தில் வாய்ப்பளித்த கலைப்புலி எஸ் தாணு அவர்களுக்கும் தனுஷுக்கும், மாரிசெல்வராஜ் அவர்களுக்கும் நன்றி .படம் நம் மனம் சொல்வது போல் அமையும். இப்படத்திற்காக மூன்றாவது முறையாக தனுஷ் அவர்கள் தேசிய விருது வாங்குவார்.மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார் தாணு சார்.” என்றார்.

 

நடிகை ரெஜிஸா விஜயன் பேசுகையில், “மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனத்தில்  ஆக்டிங் லெஜெண்ட் தனுஷ் சார், டைரக்டர் மாரி செல்வராஜ், லால் சார் போன்ற கலைஞர்களுடன் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி. குறிப்பாக ஊர் மக்களுடன் நடித்த காட்சிகள் இன்னும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கிறது .இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

நடன இயக்குநர் சாண்டி பேசுகையில், “இப்படத்தில் பாடல்கள் அருமையாக வந்துள்ளது .சந்தோஷ் நாராயணன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .இப்படத்திற்கு நடனப் பயிற்சி செய்தபோது மாரி செல்வராஜ் அவர்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.. அவர் ஆடும் ஒரு புதுவிதமான நடனத்தை கவனித்தேன்.இந்த படத்தில் பணிபுரிந்ததில் மிக்க மகிழ்ச்சி.. தயாரிப்பாளர் தாணு சார் அவர்களுக்கும் தனுஷ் சார் அவர்களுக்கும் எனது நன்றி.” என்றார்.