Aug 07, 2018 01:32 PM

கருணாநிதி உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்! - காவேரி மருத்துவமனை அறிக்கை

கருணாநிதி உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்! - காவேரி மருத்துவமனை அறிக்கை

உடல் நலக்குறைவால் ஒராண்டுக்கும் மேலாக ஒய்வில் இருந்த கருணாநிதிக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

 

இதையடுத்து, கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரிக்க, ஜனாதிபதி, மாநில முதல்வர்கள், கவர்னர், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் காவேரி மருத்துவமனை வந்தனர். மேலும், கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

இதற்கிடையே, நேற்று இரவு கருணாநிதி உடல் நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் உறுப்புகள் செயல்பட வைப்பதில் பெரிய சவால் உள்ளதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து மருத்துவமனை பகுதியில் ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், 24 மணி நேரத்திற்கு பிறகே கருணாநிதி உடல் நிலை குறித்து கூற முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

மேலும், மெரீனா கடற்கரையில் உயிரிழந்தவர்களை புதைப்பதற்கு தடை கோரிய வழக்கு திடீரென்று வாபஸ் பெறப்பட்டது. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய பிறகு, தலைமை செயலாளரை சந்திக்க சென்றார்.

 

இந்த நிலையில், காவேரி மருத்துவமனை 4.30 மணிக்கு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், கருணாநிதியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். விடுமுறையில் சென்ற போலீசாரும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதோடு, காவேரி மருத்துவமனை அருகே அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

இதனால், இன்று இரவு கருணாநிதி உடல் நிலை குறித்து சோகமான தகவல் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.