Mar 10, 2021 05:19 AM

350 வருடங்கள் பழமையான கட்டிலின் கதை சொல்லும் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

350 வருடங்கள் பழமையான கட்டிலின் கதை சொல்லும் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

பிரபல படத்தொகுப்பாளர் பீ.லெனின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தொகுப்பு செய்திருக்கும் படம் ‘கட்டில்’. இப்படத்தை இயக்கி தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கிறார் இ.வி.கணேஷ்பாபு. கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்க, கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம், எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன், ஓவியர் ஸ்யாம் ஆகியோர் நடிகர்களாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் கன்னிகா, செம்மலர் அன்னம், ‘மெட்டி ஒலி’ சாந்தி, ‘காதல்’ கந்தாஸ், சம்பத்ராம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

 

சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டில் ஒன்றை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 350 ஆண்டுகள் பழமையான கட்டில் ஒன்றை கண்டுபிடித்து பயன்படுத்தியுள்ள இயக்குநர் கணேஷ்பாபு, இப்படத்தை விருதுகளுக்கான திரைப்படமாக மட்டும் இன்றி அனைத்து தரப்பினரும் ரசிக்கக்கூடிய கமர்ஷியல் படமாகவும் இயக்கியுள்ளார். படத்தின் திரைக்கதையோடு, படத்தின் கதாப்பாத்திரங்களும், அதில் நடித்திருப்பவர்களும் ரசிகர்களுக்கு புதிய சினிமா அனுபவத்தை தரக்கூடிய விதத்தில் அமைந்துள்ள ‘கட்டில்’ திரைப்படம் புனே சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ளது.

 

மகராட்ஷ்ட்டிரா மாநில அரசாங்கம், புனே பிலிம் பவுண்டேசன் இணைந்து நடத்தும் 19 வது புனே சர்வதேச திரைப்பட விழா நாளை (மார்ச் 11) முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட விழாக்களில் ஒன்றான இத்திரைப்படவிழாவில் ‘கட்டில்’ படம் தேர்வாகியிருப்பது படக்குழுவினரை உற்சாகமடைய செய்துள்ளது.

 

Kattil

 

இது குறித்து கூறிய இயக்குநர் கணேஷ்பாபு, “வருடம்தோறும் மகாராஷ்ட்டிரா அரசாங்கம் நடத்தும் புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து தேர்வு செய்து சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. அப்படி ஒரு வாய்ப்பு எனது கட்டில் திரைப்படத்திற்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். 

 

மேலும் இத்தருணத்தில் புதுமுயற்சியாக ’கட்டில் திரைப்பட உருவாக்கம்’ என்ற நூலை வெளியிடுகிறேன். சினிமா தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வாரிவழங்கிய சாதனையாளர்கள் சிலர் ’கட்டில்’ திரைப்படத்திலும் தங்களது பங்களிப்பை தனிச்சிறப்புடன் வழங்கி இருக்கிறார்கள். இந்த ஆளுமைகளின் செயற்பாட்டால் ’கட்டில்’ எப்படி உருவானது என்பதை சொல்வதே இந்த நூலின் நோக்கம். கட்டிலில் பயணித்தவர்களின் அனுபவ மொழிகளால் நிரம்பி வழிகிறது இந்த நூல்.” என்றார்.

 

ஸ்ரீகாந்த்தேவா இசையில் வைரமுத்து, மதன்கார்க்கி வரிகளில், சித்ஸ்ரீராம் உள்ளிட்ட முன்னணி பாடகர்கள் பாடியுள்ள ’கட்டில்’ பட பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளது.