கிஷோர் நடிப்பில் உருவாகும் இசைத்திரைப்படம்

ஹீரோ, வில்லன் குணசித்திரம் என எந்தவொரு கதாப்பாத்திரமானாலும் தன் தனிப்பட்ட திறமையால், சிறப்பான நடிப்பை வழங்கி அசத்தும் கிஷோர், நடிக்கும் படத்திற்கு ‘ராஜாவுக்கு ராஜாடா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அப்பா மகள் உறவை மையப்படுத்திய இசைத்திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் திரவ் இயக்குகிரார். ‘குற்றம் கடிதல்’ படத்தில் இணை இயக்குநராகவும், பாடலாசிரியராகவும் பணியாற்றிய திரவ், ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ படத்தில் திரைக்கதையில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் திரவ் கூறுகையில், “’ராஜாவுக்கு ராஜாடா’ திரைப்படம் முழுக்க முழுக்க உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கப்படும் படமாகும். இதன் அடிநாதம் அன்பு மட்டுமே அண்டம் தேடும் என்பதாகும். இப்படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அவரின் வாழ்க்கையின் ஏதாவதொரு பிரதிபலிப்பை படத்தில் கண்டிப்பாக காண்பார்கள். மகளின் பிறந்த நாள் கொண்டாட்ட ஆசை, குடும்ப உறவுகளில் பெரும் அலையை கிளப்புகிறது. இதனை மையமாக கொண்டே படத்தின் கதை நகரும். மிகவும் வலுவான கதாப்பாத்திரங்களை, தேர்ந்தெடுத்து செய்துவரும், நடிகர் கிஷோர் இப்படத்தில் அதற்கு நேர்மாறாக அன்பான ஒரு தந்தையாக, இயல்பான ஒரு குடும்பத்து எளிய மனிதனாக நடிக்கிறார். ஒரு தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக பணிபுரிபவராக அவர் நடிக்கிறார்.” என்றார்.
இப்படத்தில் சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியான், தனன்யா, ஜஷ்வந்த் மணிகண்டன், கண்ணன் பாரதி, பிரபாகரன் J, மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.
சங்கர் ரங்கராஜன் இசையமைக்கும் இப்படத்திற்கு தேவராஜ் புகழேந்தி ஒளிப்பதிவு செய்ய, சி.எஸ்.பிரேம்குமார் படத்தொகுப்பு செய்கிறார். தேவன் பால் கலையை நிர்மாணிக்க, சமந்த் நாக் ஒலி வடிவமைப்பை கவணிக்கிறார். இயக்குநர் திரவ் பாடல்கள் எழுதுகிறார்.
’ராஜாவுக்கு ராஜாடா’ படத்தை இயக்கும் திரவ், மலையாள நடிகர் சரத் அப்பானி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மற்றொரு படத்தையும் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.