Feb 15, 2021 06:24 PM

சாதி படங்களுக்கு சவுக்கடி கொடுக்கும் படமாக ‘குழலி’ அமைய வேண்டும் - இயக்குநர் பேரரசு

சாதி படங்களுக்கு சவுக்கடி கொடுக்கும் படமாக ‘குழலி’ அமைய வேண்டும் - இயக்குநர் பேரரசு

அறிமுக இயக்குநர் செரா.கலையரசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குழலி’. முக்குழி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஆரா நடிக்கிறார்.

 

ஷமீர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி.எம்.உதயகுமார் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளார். தியாகு படத்தொகுப்பு செய்துள்ளார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட உள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

 

இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை ஊர்வசி, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, ஜாக்குவார் தங்கம் மற்றும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலா ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

 

நடிகை ஊர்வசி பேசுகையில், “பல வருடங்களாக எனது அண்ணன் படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் நடக்கவில்லை. தற்போது அண்ணன் ஒரு படம் எடுத்திருக்கிறார்.அதை நினைத்து நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், ஆனந்த கண்ணீருடன் படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், “கொரோனா காலத்திற்குப் பிறகு தற்போதுதான் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறேன். ஜாதியை ஒழிப்பதற்காக படம் வர வேண்டுமே தவிர அதை வளர்ப்பதற்கு கிடையாது. சமீப காலங்களில் வரும் சாதி பசங்களுக்கு  சவுக்கடி கொடுக்கும் படமாக குழலி அமைய வேண்டும். இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

 

Kuzhali

 

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “இத்தனை வருடத்தில் நான் இயக்க முடியாமல் போன நடிகை ஊர்வசி மட்டும்தான். இப்படி போன்றவர்கள் இங்கு வருகை தந்து இப்படத்தை வாழ்த்துகிறார்கள். கண்டிப்பாக வெற்றி அடையும். படம் பிரமாதமாக வந்துள்ளது. இயக்குநருக்கு எனது பாராட்டுக்கள். படக்குழுவினர் அனைவருக்கும் இயக்குநர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இசையமைப்பாளர் டி.எம்.உதயகுமார் பேசுகையில், “இந்த பாடல் உருவாக காரணமாக இருந்த அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் ,கிராமிய இசைக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

 

படத்தின் இயக்குநர் செரா.கலையரசன் பேசுகையில், “சமூக அக்கரை உள்ள படங்களை மட்டுமே இயக்க வந்துள்ளேன். பெண்களை தவறாக சித்தரிக்கும் படங்களை நான் எடுக்க வரவில்லை. அப்படி ஒரு எண்ணமும் எனக்கு இல்லை. படத்தின் பாடல்கள் மிகவும் பிரமாதமாக உள்ளது. இசையமைப்பாளர் உதயகுமார் அவர்களுக்கு என் நன்றி. கிராமிய இசைக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றி. தயாரிப்பாளரை தகப்பன் என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு உதவிகளையும் சுதந்திரத்தையும் எனக்கு அளித்தார். இந்தப் படத்தை வெளியிடும் நண்பர் டிரைடன்ட்ஸ் ரவீந்திரன் அவர்களுக்கு நன்றி.” என்றார்.