Sep 05, 2018 07:01 AM

தமிழகத்தின் முதல் பலகுரல் மன்னன் ராக்கெட் ராமநாதன் மரணம்!

தமிழகத்தின் முதல் பலகுரல் மன்னன் ராக்கெட் ராமநாதன் மரணம்!

தமிழகத்தின் முதல் பலகுரல் மன்னன் மற்றும் காமெடி நடிகரான ராக்கெட் ராமநாதன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.

 

மயில்சாமி, விவேக் தொடங்கி தற்போது கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக உள்ள சிவகார்த்திகேயன் என அபலர் மிமிக்ரி என்று சொல்லக்கூடிய பலகுரல்களில் பேசக்கூடிய திறன் மூலமாகவே தொலைக்காட்சிகளில் பிரபலமாகி அதன் மூலம் சினிமாவில் பிரபலமானர்கள். ஆனால், இவர்களுக்கு முன்னதாக, அதாவது தமிழகத்தின் முதல் பலகுரல் மன்னன் என்று பெயர் எடுத்தவர் ராக்கெட் ராமநாதன்.

 

சென்னை தொலைக்காட்சியிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பல குரல்களில் பேசி நிகழ்ச்சி நடத்தி வந்த இவர், ’ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது’, ’ஸ்பரிசம்’, ’வளர்த்தகடா’, ’மண்சோறு’, ’கோயில் யானை’ உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழக அரசின் கலைமாமணி நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருதுகளையும் பெற்றவர். 

 

1970-களில் அமெரிக்கா ராக்கெட் விட்ட சமயம், கவிஞர் வில்லிப்புத்தன், ‘ராக்கெட்’ என்று அடைமொழி வைத்துக்கொள், கொஞ்சம் வேகமாக இருக்கும் என்று சொல்ல, அன்றிலிருந்து ‘ராக்கெட் ராமனாதன்’ ஆனார்.

 

இந்த நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராக்கெட் ராமநாதன் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த இவருக்கு பானுமதி என்ற மனைவியும், சாய்பாலா என்ற மகளும், சாய்குரு பாலாஜி என்ற மகனும் உள்ளனர்.