Sep 25, 2018 11:55 AM

பரவசக் கவிஞரை பாடலாசிரியராக்கிய இசையரசர் தஷி!

பரவசக் கவிஞரை பாடலாசிரியராக்கிய இசையரசர் தஷி!

சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசின் விருது பெற்ற இசையரசர் தஷி, திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் பிஸியாக இருந்தாலும் அவ்வபோது பல தனி இசை ஆல்பங்களுக்கு இசையமைத்து தயாரித்தும் வருபவர், இதன் மூலம் பல புதிய கலைஞர்களை பாடலாசிரியர்களாகவும், பாடகர்களாகவும் அறிமுகம் செய்கிறார்.

 

அந்த வகையில், 40 ஆண்டுகளாக கவிதை, புத்தகம், இலக்கியம் என்று எழுத்து பணியில் ஈடுபட்டு வரும் பரவசக் கவிஞர் பரந்தூர் ராமாசாமி அவர்களை, இசையமைப்பாளர் தஷி, ‘உள்ளம் உருகுதே கண்ணா’ என்ற ஆன்மீக ஆல்பத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

கண்ணன் குறித்து பரவசக் கவிஞர் பரந்தூர் ராமசாமியின் பக்திமயமான வரிகளுக்கு, கேட்பவர்கள் உருகிவிடும் அளவுக்கு தஷியின் மெல்லிசையில் உருவாகியிருக்கும் இந்த ஆல்பத்தின் 5 பாடல்களும் கேட்பவர்களை நிச்சயம் உருக வைக்கும்.

 

துஷிதா என்ற பெங்காலி பாடகி முதல் முறையாக இந்த ஆல்பத்தின் மூலம் தமிழில் பாடியிருக்கிறார். திவ்யா, நிரஞ்சன் என்ற அறிமுக பாடகர்களின் இனிமையான குரலில் உருவாகியிருக்கும் பாடல்களோடு மொத்தம் 5 பாடல்களை கொண்ட இந்த ‘உள்ளம் உருகுதே கண்ணா’ ஆன்மீக ஆல்பம் கண்ணன் பாடல்களில் தனி சிறப்பு பெரும் என்பது உறுதி.

 

இந்த இசை ஆல்பம் குறித்து பேசிய இசையமைப்பாளர் தஷி, “பரவசக் கவிஞர் பரந்தூர் ராமசாமி 40 ஆண்டுகளாக கவிதை, புத்தகம் ஆகியவைகளை எழுதி வருகிறார். அவரை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் கவி சக்கரவர்த்தி காஞ்சி தென்றல் தான். பெரும்பாலும் ஒரு கவிஞர், மற்றொரு கவிஞருக்கு சிபாரிசு செய்ய மாட்டார்கள். ஆனால், காஞ்சி தென்றல் என்னிடம் பரந்தூர் ராமசாமியை சிபாரிசு செய்து, இவர் பல ஆண்டுகளாக கவிதை எழுதுகிறார். இவரை வைத்து ஆன்மீக ஆல்பம் தயாரிக்க வேண்டும், என்று கூறினார்.

 

அதன்படி, பரவசக் கவிஞர் எழுதிய 5 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறேன். ‘உள்ளம் உருகுதே கண்ணா’ என்ற தலைப்பில் இந்த ஆன்மீக ஆல்பத்தை தயாரித்திருக்கிறோம். இதன் பாடல்கள் அத்தனையும் கேட்பதற்கு ரொம்பவே இனிமையாக இருக்கும்.” என்றார்.

 

Ullam Uruguthey Kanna Music Album

 

சமீபத்தில் நடைபெற்ற ‘உள்ளம் உருகுதே கண்ணா’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில், இசையமைப்பாளர் தஷி கலந்துக்கொண்டு இசை குறுந்தகடை வெளியிட, பாடல்கள் எழுதிய பரவசக் கவிஞர் பரந்தூர் ராமசாமி பெற்றுக் கொண்டார். பாடல்களை பாடியவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள்.