May 18, 2018 07:36 AM

என்னுடைய படத்தை வெளியிடவே பிரச்சனை ஏற்பட்டது! - விஷால் வேதனை

என்னுடைய படத்தை வெளியிடவே பிரச்சனை ஏற்பட்டது! - விஷால் வேதனை

விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் தயாரித்து நடித்த ‘இரும்புத்திரை’ கடந்த வாரம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கொண்டாடினார்கள்.

 

சென்னையில் நேற்று நடைபெற்ற இவ்விழாவில் விஷால், அர்ஜுன், இயக்குநர் மித்ரன், எடிட்டர் ரூபன், கலை இயக்குநர் உமேஷ், நடிகர் காளி வெங்கட், ரோபோ சங்கர், எழுத்தாளர் ஆண்டனி பாக்யராஜ், பொன் பார்த்திபன், காஸ்டியூம் டிசைனர் சத்யா, ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய விஷால், “இந்த படத்தில் நான் பல காட்சிகளில் மிகவும் உண்மையாக யதார்த்தமாக நடித்தேன். ஒரு காட்சியில் என்னுடன் பாங்க் ஏஜெண்டாக நடித்த சக நடிகரை அடித்தேவிட்டேன். படத்தில் என்னுடன் நாயகியாக நடித்த சமந்தாவுக்கு நன்றி. கல்யாணமானால் நடிக்கக்கூடாது என்று இருந்த ஒரு விஷயத்தை இன்று அவர் உடைத்துவிட்டார். அது எனக்கு சந்தோஷமாக உள்ளது. 

 

இந்த படத்தை வெளியிட நான் மிகவும் போராடினேன். பணத்தின் அருமை அப்போது தான் எனக்கு தெரிந்தது. என்னுடைய நண்பன் வெங்கட் காரை விற்று எனக்கு பணம் கொடுத்தார். இன்னொரு நண்பன் பத்திரத்தை விற்று பணம் கொடுத்தார். ஏன் என்னுடைய படத்தை வெளிவராமல் தடுத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை எனக்கு இது போல் நடந்தது இல்லை. தயாரிப்பாளர்  சங்க தலைவரான என்னுடைய படத்தையே இவர்கள் வெளிவராமல் தடுக்கிறார்கள் என்றால் யோசிக்க வேண்டிய ஒன்று தான். ஒரு தயாரிப்பாளர் சங்க தலைவரின் படத்தையே தடுத்துவிட்டோம் என்று காட்ட முயற்சி செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். படத்தில் உள்ள ஆதார் கார்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க கோரி போராடுகிறார்கள். அவர்கள் அனைவரும் தியேட்டர் அருகே போராடாமல் வள்ளுவர் கோட்டம் போன்ற இடங்களில் போராடினால் யாருக்கும் இடைஞ்சல் வராது. 

 

ஆர்யா தான் இதில் வில்லனாக நடிக்க வேண்டியது. அப்போது இருந்த வெர்ஷனே வேறு. இப்போது அர்ஜுன் சார் நடித்துள்ள இந்த கதாபாத்திரம் நல்ல பெயரை பெற்றுள்ளது. படம் வெளியாக எனக்கு ஆதரவாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கு நன்றி.” என்றார்.

 

Irumbuthirai Success Meet

 

அர்ஜுன் பேசுகையில், “இரும்புத்திரையை பற்றி எல்லோரும் பாசிட்டிவாக எழுதியதற்கும். என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி நல்ல விமர்சனங்கள் கொடுத்ததற்கும் நன்றி. நானும் விஷாலுடைய தந்தையும் நண்பர்கள். அவர் தான் விஷாலை எனக்கு அறிமுகம் செய்து என்னிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக சேர்த்துவிட்டார். விஷால் என்னிடம் இயக்கம் தான் கற்க வந்தார். ஆனால் ஒருமுறை வேறு ஒரு நடிகருக்கு பதிலாக விஷாலை ஒரு காட்சியில் நடிக்க சொன்னேன். விஷாலும் ட்ரைளுக்காக அதில் நடித்தார். அதை பார்த்ததும் விஷாலை நடிகராக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது, அதை நான் விஷாலுடைய தந்தையை சந்திக்கும் போது கூறினேன். அவரும் விஷாலை வைத்து ’செல்லமே’ படத்தை தயாரித்தார். படம் வெற்றி பெற்றது. நான் சொன்னது போலவே விஷால் இன்று வெற்றிகரமான ஹீரோவாக, தயாரிப்பாளராக, நடிகர் சங்க பொது செயலாளராக மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ளார். சந்தோஷமாக உள்ளது. இன்று அவருடைய படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது. 

 

நான் ஜென்டில்மேன் படத்தில் நடிக்கும் போது இயக்குநர் ஷங்கர் புதுமுக இயக்குநர் தான். அதே போல் திறமையான இயக்குநராக மித்ரன் வருவார்.” என்றார்.