Jun 15, 2020 06:04 PM

நன்றி மறந்த ஆர்.கே.செல்வமணி - நாஞ்சில் பி.சி.அன்பழகன் கண்டனம்

நன்றி மறந்த ஆர்.கே.செல்வமணி - நாஞ்சில் பி.சி.அன்பழகன் கண்டனம்

கொரோனா பாதிப்பில் இருந்தும், முன் எச்சரிக்கை நடவடிக்கையா பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்தும் மக்களை காப்பாற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி, தொடர்ந்து அரசை விமர்சனம் செய்து வருகிறார். அவரது இத்தகைய நடவடிக்கைக்கு பிரபல இயக்குநரும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

ஊரடங்கிலும், RK செல்வமணிக்கு  நாவடங்கவில்லை.

 

திரைத்துறை சார்ந்த அரசு நிகழ்வுகளில், செல்வமணியை மாப்பிள்ளை அந்தஸ் சோடு முதல்வர்  நேரில் கௌரவிக்கிறார் .. அவரோ நன்றி மறந்து விளம்பர வெறி பிடித்து, பாதி நாள் ஆந்திராவில் இருந்து கொண்டு அந்தர் பல்டி அட்டைக் கத்தி  அவதூறு பேட்டி கொடுக்கிறார்.

 

எல்லா துறைகளுக்கும் அரசு கவனிக்கிறது, திரைத்துறைக்கு அரசு எதுவும் செய்யவில்லை என்கிறார் பிணி வார்த்தைகள் கொண்ட மணி.

 

அச்சாணி இல்லாத தேர், முச்சாணியும் ஓடாது.

 

அரிதார துறைக்கு சங்கங்கள் அமைய நிதி வழங்கியவர் அவதார தலைவர் புரட்சித் தலைவர் .

 

மானியங்கள் கிடைக்க கருணை மனசோடு உதவியவர் புரட்சித் தலைவி.

 

கொரனா - பிணிக் காலத்திலும், 21,0679 திரைத் துறை நல வாரிய உறுப்பினர்களின் பசிப்பிணி போக்க 2 கோடி 26 - லட்சம் உதவியிருக்கிறார் அச்சாணி முதல்வர்.

 

149 - படங்களுக்கு  தலா - 7 லட்சமாக நலிந்த தயாரிப்ளர்களுக்கு, மழை மேக மனசோடு முதல்வர் உதவியதை வரலாறு குறித்து வைத்திருப்பதை, தகராறு பிடித்த மணி மறந்ததேனோ..

 

முயல் குழிபறிக்க.. பறவை விதைபோடும்.

 

பையனூரில், தங்கத் தாரகை பெயரில் அரங்கம் அமைய 5 கோடியை ஒதுக்கீடு செய்து, இரண்டு கட்டங்களாக ஒன்றரை கோடியை  உமது கரத்தில் தந்த, கலைத்துறையை தாய்ப் பறவையின் சிறகுகளாய் பாதுகாக்கும், ,எளியவர்களையும் புன்னகையோடு வரவேற்கும் - முதல்வரின் மனிதநேய அரசை விமர்சன வீச்சரிவாளால் தாக்கலாமா..?

 

இந்த ஊரடங்கு உலகம் தழுவியது.. எங்கும் படப்பிடிப்பு துவங்கவில்லை.

 

கம்பெனிகளுக்கு 50% பேர் வேலை செய்யலாம்.. கலைத்துறைக்கு மட்டும் 60-பேராயென்று,  200 - பேருக்கு அடிபோட்டு - பிடியில்லாமல் கொரனா சோகத்திலும் காமெடியாக கேட்கிறார். கடந்த 10 வருடங்களாக சிறு முதலீட்டு படங்களின் படப்பிடிப்புகளில் 60 முதல் 75 பணியாளர்கள் மட்டுமே பணிபுரிவதை மணி மறந்தது ஏனோ...

 

ஆம், புதுமுக நடிகர் நடித்தாலே, வேடிக்கை பார்க்க திருவிழா கூட்டம் சுயம்பாக வரும்.

 

யுனிட்டிலே, 200-பேர் யென்று, செல்வமணி வாதத்திற்கு - ஒப்புக்கு - சப்பாக வைத்துக் கொண்டாலும், படப்பிடிப்பு தளத்தில் இடைவெளியில்லாமல் நசுங்கி, கொரனாவே செத்துவிடும்.

 

செல்வ மணிக்கு ஆந்திர அரசியலின் தந்திரங்கள் புரியுமளவுக்கு, 10-வருடங்களாக தமிழ் சினிமாவின் எதார்த்தம் புரியவில்லை.

 

10 வருடங்களாக சொத்தையும்-தாலியையும் விற்று 2-கோடிக்கு படமெடுக்கும் தயாரிப்பாளார்கள் யாரும், 75 - பேருக்கு மேல் டெக்னீசியன்களை வேலைக்கு அமர்த்துவதில்லை.

 

50-கோடிகளை தனக்கு மட்டுமே சம்பளமாக பெற்று, 150-கோடிகளுக்கு புரடெக்ஷன் செலவுகளை இழுத்து விடும், தயாரிப்பாளர்கள் தெருக்கோடிக்கு செல்வதை ஓசைப்படாமல் ரசிக்கும், பிரபல ஹீரோக்களுக்காக 200 - பேர் பயன்பட கொரனா பதட்ட காலத்திலும் - முட்டுக் கொடுத்து மூச்சு வாங்கப் பேசுகிறார் செல்வத்தை நேசிக்கும், செல்வமணி

 

வியர்வை பட்ட இடத்தில், கரண்டி பட்டால் சோற்றிலும் கொரனா விசாயின்றி பயணிக்காதா...

 

கொரனா சங்கிலியை தனிமையால் அறுத்து - உயிர் வாழ்தலே இக்கண தேவை.

 

உயிர் பிழைத்தால் .. கலைஞர்கள் சுயேட்சைகளாக - உழைத்து பிழைப்பார்கள்.

 

தமிழகத்திற்கான அர்ப்பணிப்புகளில் - கரைப் படியாமல் விழித்திருந்து உழைக்கும் அரசை சீண்டாமல், வாங்கிய நிதிகளுக்கான கணக்கை தபால்கார்டு மாதிரி திரையில்லாமல் சங்க -உறுப்பினர்களுக்கு காட்டுவதே செல்வமணி வகையறாக்களுக்கு வெள்ளை அறிக்கை அழகு.

 

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

’காமராசு’, ’அய்யாவழி’, ’நதிகள் நனைவதில்லை’ ஆகிய படங்களை இயக்கி தயாரித்திருக்கும் நாஞ்சில் பி.சி.அன்பழகன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படத்தை இயக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.