May 07, 2018 09:33 AM

சர்ச்சை புகைப்பட விவகாரம் - எச்சரிக்கை விடுத்த நிவேதா பெத்துராஜ்!

சர்ச்சை புகைப்பட விவகாரம் - எச்சரிக்கை விடுத்த நிவேதா பெத்துராஜ்!

’ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக அவர் நடித்த ‘டிக் டிக் டிக்’ விரைவில் வெளியாக உள்ளது.

 

இதற்கிடையே, நிவேதா பெத்துராஜ் என்று கூறி ஆபாசமான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அதனை சில இணையதள ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டது. பிறகு அந்த புகைப்படம் நிவேதா பெத்துராஜ் அல்ல தெரிந்ததும், மறுப்பு செய்தியும் வெளியிடப்பட்டது.

 

இந்த நிலையில், தன்னைப் பற்றி தவறான செய்தி வெளியிடுவது, தவறான புகைப்படத்தை தான் என்று கூறி செய்தி வெளியிடுவது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், தான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன், என்று நிவேதா பெத்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களில் வேறு ஒரு நடிகையின் புகை படங்களை வெளியிட்டு அது நான் தான் என்று பொய் பரப்புரை செய்து வருகின்றனர். என் மேல் அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து இதை பற்றிய கவனத்தை என்னிடம் கொண்டு வந்தனர். இந்த செயலை வெறும் கவன குறைவான செயலாக என்னால் பார்க்க முடியவில்லை. என் பெயரை கெடுக்க வேண்டும் என்று யாரோ இவ்வாறு செய்கிறார்கள் என்று சந்தேக பட வேண்டி உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது. இதன் தொடர்பாக  நான் சட்ட ஆலோசனை செய்து தொடர்ந்து இவ்வாறு செய்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என முனைப்புடன் உள்ளேன்.

 

ஊடகங்களின் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. அதனால் மட்டுமே இதுவரை அமைதியாக இருந்தேன். ஆயினும் இந்த பிரச்சினை தொடருகிறது. ஒரு நடிகை என்றாலும் எங்களுக்கும் குடும்பம் உண்டு. எங்களை சார்ந்த, நாங்கள் சார்ந்த சமுதாயமும் எங்களுக்கும் உண்டு. இத்தகைய பொய் செய்திகள் எங்களுக்கு மிக பெரிய பாதிப்பை தருகிறது. இந்த கடிதம் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் வராமல் தடுக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து இவ்வாறு நிகழுமானால் சட்ட நடவடிக்கை ஒன்று தான் தீர்வு, என்று எனது சட்ட ஆலோசகர் கூறுவதை நான் ஏற்றுக்க கொள்வதை தவிர வேறு வழி இல்லை" என்று தெரிவித்துள்ளார்.