Jan 12, 2020 03:28 AM

பார்த்திபனை வெறுப்பேத்திய விகடன் விருது!

பார்த்திபனை வெறுப்பேத்திய விகடன் விருது!

திரைப்பட நட்சத்திரங்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விருது வழங்குவது என்பது ஏதோ கலை நிகழ்ச்சியாகிவிட்ட தற்போதைய காலக்கட்டத்தில், பிரபல வாரத இதழான விகடன் சார்பில் வழங்கப்படும் விருது நிகழ்ச்சியால் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வெறுப்பாகியுள்ளார்.

 

பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த படம் ‘ஒத்த செருப்பு’. கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான தரமான படங்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் இப்படத்தில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே படம் முழுவதும் வரும். இப்படி ஒரு புதிய முயற்சியை, ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக இப்படத்தை பார்த்திபன் இயக்கியது தான் இப்படத்தின் சிறப்பம் அம்சம்.

 

விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பு பெற்ற ‘ஒத்த செருப்பு’ படம் பல்வேறு விருதுகளை வென்றது. குறிப்பாக 2 தேசிய விருதுகளை வென்றதோடு, ஆஸ்கர் விருது தேர்வு பட்டியலிலும் இடம் பிடித்தது. இதுபோக சென்னை சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட பல விருதுகள் இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது.

 

இந்த நிலையில், சமீபத்தில் வழங்கப்பட்ட விகடன் திரைப்பட விருதுகளில் ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு எந்த ஒரு விருதும் வழங்கப்படவில்லை.

 

இது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கும் பார்த்திபன்,  ”2 தேசிய விருது+ஆஸ்கர் Eligible list-ல் OS7 ஆனால் விகடனில் இல்லை!சிறந்தப் படமே எடுத்தாலும்,அதை சிறந்ததாய் தேர்ந்தெடுக்காதால் வருங்- காலங்களில் விகடனின்  விருதுகளை நான் வாங்கிக் கொள்ளப்போவதில்லை. வாழ்நாள் சாதனையாளர் விருதாக உங்கள் கௌரவத்தை ஏற்றுக்கொள்கிறேன்! அமைதி யாக திரும்பி விட்டே” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.