Apr 25, 2022 06:30 PM

விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘பயணிகள் கவனிக்கவும்’ படக்குழு

விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘பயணிகள் கவனிக்கவும்’ படக்குழு

விதார்த் நடிப்பில், எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ’பயணிகள் கவனிக்கவும்’. மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘விக்ருதி’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக்கான இப்படத்தில் கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

 

வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி ஆஹா ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் சமீபத்தில் வெளியிட்டனர். டிரைலர் வெளியான ஒரு சில மணி நேரங்களில் வைரலான நிலையில், படத்தின் தலைப்பு எதிராக பிரச்சனையும் எழுந்தது.

 

மறைந்த பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய ஒரு நாவல் இந்த தலைப்பில் வெளியாகியிருப்பதால், பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன், ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தனது தந்தை எழுதி ‘பயணிகள் கவனிக்கவும்’ நாவலை தான் திரைப்படமாக எடுக்க இருப்பதாகவும், அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். இதனால், கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டதோடு, இந்த பிரச்சனை ஊடகங்களில் பல விவாதங்களையும் ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், 'பயணிகள் கவனிக்கவும்' பட தலைப்பு குறித்த விவகாரத்தில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் மற்றும் படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் விவின் ஆகியோர் எழுத்தாளர் பாலகுமாரனின் வாரிசை சந்தித்து விளக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் சுகமான தீர்வு காணப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

 

இது தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரான 'பயணிகள் கவனிக்கவும்' என்ற திரைப்படம், எதிர்வரும் 29. 4. 2022 ஆம் தேதியன்று ஆஹா டிஜிட்டல் தளத்தில், 'ஆஹா ஒரிஜினல்' படைப்பாக வெளியாகிறது. இந்நிலையில் 'பயணிகள் கவனிக்கவும்' என்ற படத்தின் தலைப்பில், 1993 ஆம் ஆண்டில் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய புத்தகம் ஒன்று வெளியானதாக தகவல்  இணையதளங்களில் பரவியது. இது தொடர்பாக எழுத்தாளர் பாலகுமாரனின் புதல்வர் சூர்யா பாலகுமாரன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இது எங்களின் கவனத்திற்கு வந்தது. மேலும் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் மூவரும் சூர்யா பாலகுமாரன் அவர்களது இல்லத்திற்குச் சென்றோம். எங்களை அவர்கள் உவகையுடன் வரவேற்றனர். 

 

Balakumaran and Payanigal Kavanikkavum

 

அதனையடுத்து படத்தின் கதைக்கும், பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும் நாவலுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும், படத்தின் தலைப்பிற்காக மட்டுமே பயணிகள் கவனிக்கவும் என்பதை பயன்படுத்தியிருப்பதாகவும் விளக்கமளித்தோம்.  எங்களின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட பாலகுமாரன் குடும்பத்தினர், நன்றி என்ற அறிவிப்பில் பாலகுமாரன் அவர்களது பெயரை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். நல்லெண்ணத்தின் அடிப்படையில் நாங்கள் அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு படத்தின் தொடக்கத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு நன்றி தெரிவிக்க ஒப்புக்கொண்டிருக்கிறோம். மேலும் இவ்விவகாரத்தில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

 

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக இணையத்தில் விவாத பொருளாக பேசப்பட்டு வந்த 'பயணிகள் கவனிக்கவும்' என்ற பட தலைப்பு குறித்த விவகாரம் முடிவுக்கு வந்தது.